சிறிலங்கா நாடாளுமன்றத்தை கலைத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவிற்கு எதிராக நேற்று தாக்கல் செய்யப்பட்ட13 அடிப்படை உரிமை மீறல் மனுக்களை நேற்றைய தினமே விசாரணைக்கு எடுத்துக்கொண்டிருந்த உச்ச நீதிமன்றம் இன்றைய தினம் முற்பகல் 10.00 மணி வரை விசாரணையை ஒத்திவைத்திருக்கின்றது.
ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட அரசியல் கட்சிகளினாலும், தனி நபர்ளினாலும் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் பிரதான பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டிருந்த சட்டமா அதிபர், இவற்றுக்கு பதிலளிப்பதற்கு கால அவகாசம் கோரியதை அடுத்தே இன்றைய தினம் வரை தலைமை நீதியரசர் தலைமையிலான மூவர் அடங்கிய உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் விசாரணைகளை ஒத்திவைத்திருக்கின்றது.
சிறிலங்காவின் தலைமை நீதியரசர் நளின் பெரேரா தலைமையில் பிரியந்த ஜயவர்தன, பிரசன்ன ஜயரத்ன ஆகிய உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் உள்ளூர் நேரப்படி நேற்று பிற்பகல் 2.00 மணி முதல் மாலை 5.30 வரை நாடாளுமன்றத்தை கலைத்து ஜனாதிபதி விடுத்த விசேட வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்யக் கோரிய அடிப்படை உரிமை மீறல் மனுக்களை ஆராய்ந்திருந்தது.
நீண்ட வாதப்பிரதிவாதங்கள் நடந்த பின்னர் இந்த மனுக்கள் தொடர்பில் பதிலளிக்க தனக்கு இரண்டு அல்லது மூன்று நாட்கள் மேலும் கால அவகாசம் தேவையென மனுக்களில் பிரதிவாதிகளில் ஒருவராக குறிப்பிடப்பட்டுள்ள சட்ட மா அதிபர் மன்றில் கேட்டுக்கொண்டார்.
எனினும் இந்த வழக்கின் முக்கியத்துவம் கருதி இன்றைய தினமே தமது தரப்பு விளக்கத்தை முன்வைக்குமாறு நீதியரசர்கள் குழாம் சட்டமா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளனர்.
நாடாளுமன்றத்தை கலைத்த ஜனாதிபதியின் நடவடிக்கை அரசியல் சாசனத்திற்கு முரணானது என்று குற்றம்சாட்டிவந்த ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்தேசியக் கூட்டமைப்பு, ஜே.வி.பீ, தமிழ் முற்போக்கு முன்னணி,
சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகளும், அரசியல்கட்சிகளின் முக்கியஸ்தர்களும், சட்டத்தரணிகளும், மாற்றுக் கொள்கைக்கான கேந்திர நிலையமும் தனித்தனியே 13 மனுக்களை உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்திருக்கின்றன.
இந்த அடிப்படை உரிமை மீறல் மனுக்களில் சட்டமா அதிபர், தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்டவர்கள் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
19ஆவது திருத்தத்தை முழுமையாக வாசித்தறியாது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானம் மேற்கொண்டுள்ளதாக தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்தார்.
மக்களின் வாக்குகளால் தெரிவான 225 பிரதிநிதிகளுக்கும் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரான முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் குற்றம்சாட்டினார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தை கலைத்தமைக்கு எதிராக தாங்கள் கோரியுள்ள இடைக்காலத் தடை தொடர்பில் உச்ச நீதிமன்றம் தீர்மானம் ஒன்றை வழங்கும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுடான எம்.ஏ.சுமந்திரன் நம்பிக்கை வெளியிட்டார்.
இதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்த சட்டத்தரணிகளான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களும், ஜனாதிபதியின் சட்டவிரோத உத்தரவிற்கு நீதிமன்றினால் உரிய தீர்ப்பு கிடைக்கும் என்று நம்பிக்கை வெளியிடடனர்.
இது தொடர்பில் சுஜீவ சேனசிங்க தெரிவிக்கையில்: “நான்கரை வருடங்களுக்குள் நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறசேனவுக்கு எவ்வித அதிகாரமும் இல்லை. அரசியல் யாப்பின் ஊடாகவும், மக்கள் தீர்ப்பின் ஊடாகவும் இந்த அதிகாரமே ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ளது. ஐந்து வருடங்களுக்கு இந்த நாடாளுமன்றம் அதிகாரம் பெற்றுள்ளது. அதனை கலைப்பதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கே அதிகாரம் உள்ளது. என்றார்.
மேலும் இது தொடர்பில் அஜித் பி பெரேரா தெரிவிக்கையில்: “ ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசியல் யாப்பினை மீறி நான்கரை வருடங்களுக்கு முன்னதாக நாடாளுமன்றத்தை கலைத்துள்ளார். இது யாப்புக்கு முரணான விடயம். தேர்தல் ஒன்றை நடத்துவதற்கு சுமார் 500 கோடி வரையில் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே சட்டவிரோதமாக நடைபெறும் தேர்தல்
ஒன்றுக்கு இவ்வளவு செலவிட வேண்டிய அவசியமில்லை. இந்நிலையில் நாட்டில் அரசியல் ஸ்தீரதன்மையை நிலைநாட்ட இடைக்காலத் தடையுத்தரவொன்றை எதிர்ப்பார்க்கின்றோம். உயர் நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பு நியாயமானமதாக இருக்குமென நாம் நம்புகின்றோம்”. என்றார்.
இதேவேளை நேற்றைய அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தொடர்பான விசாரணைகள் இடம்பெற்றுக்கொண்டிருந்த போது உச்ச நீதிமன்ற வளாகத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஏராளமான ஆதரவாளர்களும், அரசியல் கட்சிகளின் முக்கியஸ்தர்களும் திரண்டிருந்தனர். இதனால் அங்கு ஏராளமான பொலிசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்ததுடன், மனு தாக்கல்செய்யப்பட்டது முதல் நேற்றைய விசாரணைகள் முடியும் வரை பதற்றமான சூழ்நிலையொன்று தோற்றுவிக்கப்பட்டிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.