மானிப்பாய் பிரதேச சபைக்குட்பட்ட ஜே/139 கிராம சேவகர் பிரிவில் இரண்டு மாடி கட்டடம் ஒன்று அமைக்கப்பட்டு வருகிறது. அந்த கட்டடமானது முறையற்ற வகையில், ஆளுநரின் உத்தரவையும் மீறி கட்டப்பட்டு வருவதாக குற்றம்சாட்டப்பட்டள்ளது.
இது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி வடக்கு மாகாண ஆளுநருக்கு அவசர கடிதம் ஒன்றினை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது,
மானிப்பாய் பிரதேச சபையில் இடம்பெறும் முறையற்ற கட்டிட நிர்மாணம் தொடர்பான அவசர தலையீடு கோரிக்கை
யாழ்ப்பாணம் மானிப்பாய் பிரதேச சபைக்குட்பட்ட ஜே/139 கிராம சேவகர் பிரிவில், முறையற்ற வகையில் அனுமதி வழங்கப்பட்டு இரண்டுமாடி கட்டடம் ஒன்று நிர்மாணிக்கப்பட்டு வருவது தொடர்பாக மக்களிடமிருந்து கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இக்கட்டடம் சம்பந்தமாக பாதிக்கப்பட்ட தரப்பினரால் பல முறை வலிகாமம் தென்மேற்கு (மானிப்பாய்) பிரதேச சபை, உள்ளூராட்சி திணைக்களம் மற்றும் நகர அபிவிருத்தி அதிகார சபை ஆகியவற்றிற்கு முறையீடுகள் செய்யப்பட்டுள்ள போதிலும், எந்த உரிய நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
மேலும், குறித்த விடயம் தொடர்பில் தங்களது தலைமையிலான ஆளுநர் அலுவலகம் கடந்த நவம்பர் மாதம் எழுத்துமூலம் கட்டிட நிர்மாணப் பணிகளை இடைநிறுத்துமாறு உத்தரவிட்டிருந்த நிலையிலும், தற்போது அந்த உத்தரவை மீறி மீண்டும் நிர்மாணப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன என்பது மிகுந்த கவலைக்குரிய விடயமாகும்.
இதனை விட அதிகமாக கவலைக்குரியது, பிரதேச சபையினரே மீண்டும் அனுமதி வழங்கியதாக கூறப்படுவது, பாதிக்கப்பட்ட மக்களிடம் “நீதிமன்றம் செல்லுங்கள்” என பொறுப்பற்ற பதில் வழங்கப்படுவது, மக்களின் காணி எல்லைகள் மீறப்படுவது, பயன்தரும் மரங்கள் அச்சுறுத்தலின் கீழ் வெட்டப்படச் செய்யப்படுவது, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கோரப்பட்ட தகவல்களும் வழங்கப்படாதது போன்ற விடயங்களாகும்.
மேலும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தங்கள் கடமைகளை முறையாக நிறைவேற்றாததுடன், சிலர் பொறுப்பற்ற வகையில் செயல்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. இது நல்லாட்சிக்கும் சட்ட ஆட்சிக்கும் எதிரான ஒரு ஆபத்தான முன்னுதாரணமாகும்.
எனவே, தாங்கள் வழங்கிய இடைநிறுத்த உத்தரவை உடனடியாக அமல்படுத்துதல், குறித்த கட்டட நிர்மாணத்தின் சட்டபூர்வ நிலையை விசாரணைக்கு உட்படுத்துதல், சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் செயல்பாடுகள் குறித்து சுயாதீன விசாரணை நடத்துதல், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க உடனடி நடவடிக்கை எடுக்குதல் என தங்களது அவசர தலையீட்டை கோருகின்றேன்.
இவ்விடயம் தொடர்ந்தும் அலட்சியப்படுத்தப்பட்டால், பொதுமக்களின் அரசியல் மற்றும் நிர்வாக அமைப்புகளின் மீது உள்ள நம்பிக்கை கடுமையாக பாதிக்கப்படும் என்பதை வலியுறுத்த விரும்புகின்றேன் என குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த கடிதத்தின் பிரதியானது வடக்கு மாகாண உள்ளூராட்சி அதிகார சபைக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.

