வடக்கில், தமிழீழ விடுதலைப் புலிகள் செய்ததையே, தற்போது ஒன்றிணைந்த எதிரணியினர் செய்கின்றனர் என, அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.ஐக்கிய தேசியக் கட்சித் தலைமையகத்தின் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”ஒருங்கிணைந்த எதிரணியினர் தற்போது அரசாங்கத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தை மேற்கொள்ள கொழும்புக்கு மக்களை அழைத்துக்கொண்டு வருகிறார்கள்.
உண்மையில், இவர்கள் எதற்காக இந்த ஆர்ப்பாட்டத்தை மேற்கொள்ள வேண்டும்? இவர்களுக்கான இலக்குதான் என்ன? இவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை எதற்காக முன்னெடுக்கிறார்கள் என்று புரியவில்லை. 2001, 2005ஆம் ஆண்டில் ஐக்கிய தேசியக் கட்சி கொழும்பிற்கு மக்களை வரவழைத்து ஆர்ப்பாட்டம் நடத்தியமைக்கு ஒரு காரணம் இருக்கின்றது.
அதேபோல், கடந்த அரசாங்கத்தின் காலத்தில் இடம்பெற்ற கொலை, கொள்ளை, கடத்தல் சம்பவங்களுக்கு எதிராகவும் நாம் ஆர்ப்பாட்டங்களை நடத்தியுள்ளோம். இவ்வாறு கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டங்களுக்கு எல்லாம் ஒரு காரணம் இருக்கின்றன. ஆனால், இந்த ஆர்ப்பாட்டத்துக்கு உண்மையான காரணம் என்ன?
வடக்கில், தமிழீழ விடுதலைப் புலிகள் செய்ததைத் தான் ஒருங்கிணைந்த எதிரணியினரும் செய்கிறார்கள். தமது தேவைக்காக பொதுமக்களை புலிகள் எவ்வாறு பலியாக்கினார்களோ, அதேபோன்றுதான் தங்கள் மீதான குற்றங்கள் மீதான வழக்குகளில் இருந்து தப்பிக்க எதிரணியினர் மக்களைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
எவ்வாறாயினும், நாம் இந்த விடயங்கள் தொடர்பில் ஜனநாயக ரீதியாகவே செயற்படுவோம். அந்தத் தரப்பினர் சரத் பொன்சேகாவுக்கு செய்ததுபோல் எல்லாம் நாம் நடந்துக் கொள்ள மாட்டோம். இந்த நாட்டில் தற்போது பூரண ஜனநாயகம் உள்ளது. ஊடகம் மற்றும் கருத்துச் சுதந்திரம் மேலோங்கியுள்ளது. சுயாதீன ஆணைக்குழுக்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு, நாம் முழுமையான சுதந்திரத்தையும் ஜனநாயகத்தையும் மக்களுக்கு பெற்றுக்கொடுத்துள்ளோம். 10- 20 வருடங்களுக்குப் பின்னர் இந்த நாட்டில் ஒருவேளை பொதுஜன பெரமுனயின் ஆட்சி வந்தால், அப்போது மக்கள் எமது இந்த நல்லாட்சி தொடர்பில் பெறுமையாக பேசுவார்கள்.
நாம் இந்த அரசாங்கத்தை பாரிய சுமையுடன்தான் பொறுப்பேற்றோம். இந்நிலையில் கூட மக்களுக்கு சுமையை வழங்கிவிடக் கூடாது என்றே முடிந்தவரை சேவையாற்றிக் கொண்டிருக்கிறோம். அரசாங்கம் ஆட்சிக்கு வந்து மூன்று வருடங்கள் கடந்துவிட்ட போதிலும், பெற்றோல், டீசல் உள்ளிட்டவற்றின் விலை கடந்த அரசாங்கத்தை விட இன்னும் குறைவாகத்தான் உள்ளது.
அத்தியாவசியப் பொருட்களின் விலையில் காலத்திற்கு ஏற்ப சில மாற்றங்கள் வந்தாலும், கடந்த அரசாங்கம் போல நாம் மக்களை சிக்கலில் தள்ளவில்லை. சொல்லப்போனால், ஐரோப்பிய நாடுகளில் இல்லாத அளவுக்குக்கூட எமது நாட்டில் ஜனநாயகம் உள்ளது” எனத் தெரிவித்தார்.