ஸ்காட்லாந்துக்கு சுற்றுலா சென்ற போது மலைமுகட்டில் இருந்து விழுந்து கால்கள் உடைந்து, ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்ட சிறுவன் உடல் நலம் தேறி வருகிறான்.
பிரான்சைச் சேர்ந்த 14 வயது சிறுவன் ஆர்தர் போர்கொக்னோ (Arthur Borgogno)தனது தாயுடன் விடுமுறையைக் கழிக்க ஸ்காட்லாந்து சென்றுள்ளான். கடந்த திங்களன்று விக் அருகே உள்ள சின்க்ளெய்ர் (Sinclair)அரண்மனைக்கு சென்றுவிட்டு கரடுமுரடான மலைமுகட்டில் சென்று கடலின் அழகைப் பார்த்துக் கொண்டிருந்தபோது கால் இடறி விழுந்தான்.
15 அடி ஆழத்தில் இருந்த மற்றொரு பாறை மீது விழுந்தபோது, கால்கள் பாறை இடுக்கில் சிக்கிக் கொண்டன. தொடர்ந்து சீறிவரும் அலைகளுக்கு மத்தியில் தன்னந்தனியாக 2 மணி நேரம் போராடி கால்களை விடுவித்துக் கொண்ட நிலையில், தாய் அளித்த தகவலின் பேரில் அங்கு விரைந்த மீட்புப் படையினர் ஹெலிகாப்டர் உதவியோடு சிறுவனை மீட்டனர்.
மீட்கப்பட்ட சிறுவன் ஆர்தர் தற்போது நலமுடன் இருப்பதாகவும், ஸ்காட்லாந்தை விட்டு நாடு திரும்ப தன் மகனுக்கு மனமில்லை என்றும் அவரது தாயார் குறிப்பிட்டுள்ளார்.