பிக்பாஸ் 3 சீசன் நிகழ்ச்சியில் இருந்து இதுவரை திடீரென இரண்டு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். பெண்களைப் பற்றிய ஒரு விமர்சனத்தில் இரண்டு வாரங்களுக்கு முன்பு சரவணன் வெளியேற்றப்பட்டார். நேற்று முன்தினம் சனிக்கிழமை விதிகளுக்கு மீறி செயல்பட்டதாக மதுமிதா வெளியேற்றப்பட்டார்.
மதுமிதா வெளியேறும் போது நிகழ்ச்சித் தொகுப்பாளரான கமல்ஹாசனுடன் உரையாடிவிட்டுத்தான் சென்றார். ஆனால், மதுமிதா வெளியேறியதற்கான நிகழ்வுகளை விஜய் டிவி ஒளிபரப்பவில்லை. மதுமிதாவும் அதை வெளிப்படையாகச் சொல்லவில்லை, கமல்ஹாசனும் அது என்ன என்பதை விளக்கமாக நேயர்களுக்குத் தெரிவிக்கவில்லை.
மதுமிதா தற்கொலைக்கு முயன்றதால் தான் அவர் நிகழ்ச்சியை விட்டு வெளியேற்றப்பட்டார் என தகவல்கள் வெளியாகின. அவரது இடது கை மணிக்கட்டிலும் அவர் கட்டு கட்டியிருந்தார். கமலிடம் பேசும் போது, சேரன், கஸ்தூரி தவிர வேறு யாருடனும் பேச விருப்பமில்லை என்றார். அதோடு, தான் தலைவராக இருந்தால் சிலர் நிகழ்ச்சியை விட்டு வெளியேறுவதாகச் சொன்னார்கள் என்றும் சொன்னார்.
கடந்த வாரம் நடைபெற்ற ஒரு டாஸ்க்கில், மதுமிதா, காவிரி பிரச்சினையைப் பற்றி பேசினாராம். அதற்கு ஷெரின் கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். அவருக்கு ஆதரவாக கவின், சாண்டி, தர்ஷன், முகென், லாஸ்லியா உள்ளிட்டவர்களும் ஒரு அணியில் திரண்டுள்ளனர். அந்த வாக்குவாதம் முற்றியதால்தான் மதுமிதா அப்படி ஒரு முயற்சியை எடுத்துள்ளார் என்கிறார்கள்.
ஒரு டிவி நிகழ்ச்சியாக இருந்தாலும், அதில் ஒருவரைத் தற்கொலைக்கு முயலும் அளவிற்கு தூண்டிவிடுவதும் ஏற்புடையதல்ல. கடந்த வாரத்திலிருந்தே கவின், சாண்டி, தர்ஷன், முகென், லாஸ்லியா ஆகியோர் ஒரு அணியாக செயல்படுவதும், சக போட்டியாளர்களிடம் மரியாதைக் குறைவாகப் பேசுவது, கமெண்ட் அடிப்பது ஆகியவற்றையும் செய்து வருகின்றனர்.
பெண்களைப் பற்றி யதேச்சையாகப் பேசிய சரவணனை உடனடியாக நிகழ்ச்சியை விட்டுத் தூக்கியது போல, மதுமிதான் தற்கொலை முயற்சிக்குக் காரணமாக இருந்த கவின் உள்ளிட்டவர்களையும் நிகழ்ச்சியை விட்டுத் தூக்க வேண்டும் என்ற குரல் வலுத்து வருகிறது.
விஜய் டிவி தரப்பில் எப்படியும் நடந்தது என்ன என்பது குறித்து காட்டப் போவதுமில்லை, வெளியில் சொல்லப் போவதுமில்லை. மதுமிதாவிடமும் வாயைத் திறக்கக் கூடாது என்று சொல்லியிருப்பார்கள்.
எப்படியிருப்பினும் ஒரு நாள் உண்மை வெளிவந்தே தீரும். அப்போது வருத்தம் தெரிவிப்பதை விட சம்பந்தப்பட்டவர்கள் இப்போதே நடந்ததைக் கூறி வருத்தம் தெரிவிப்பதே நல்லது என பெரும்பாலானோர் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.