மகளிர் ஆசியக் கோப்பை டி20 தொடரில் போட்டிகளில் பிளேயர் ஆஃப் தி மேட்ச் விருதுக்குப் பரிசுத் தொகையாக 250 அமெரிக்க டாலர்கள் மட்டுமே வழங்கப்படுவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதன் மதிப்பு இந்திய ரூபாயில் 16,778 மட்டுமே. இந்தியா, மலேசியா, தாய்லாந்து, இலங்கை, வங்கதேசம், பாகிஸ்தான் உள்ளிட்ட அணிகள் பங்கேற்கும் மகளிர் ஆசியக் கோப்பை டி20 தொடர் மலேசியாவில் நடந்து வருகிறது. இந்திய அணி, தனது முதல் போட்டியில் மலேசியாவை எதிர்கொண்டது. அந்தப் போட்டியில் முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ், 97 ரன்கள் குவிக்க, முதலில் பேட் செய்த இந்திய அணி 169 ரன்கள் குவித்தது. அடுத்து களமிறங்கிய மலேசிய மகளிர் அணியை 27 ரன்களில் சுருட்டி 142 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இந்தப் போட்டியில் மிதாலி ராஜ் பிளேயர் ஆஃப் தி மேட்சாகத் தேர்வு செய்யப்பட்டார். அதேபோல், தாய்லாந்துக்கு எதிரான இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் பிளேயர் ஆஃப் தி மேட்சாகத் தேர்வு செய்யப்பட்டார். அவர்கள் இருவருக்குமே 250 அமெரிக்க டாலர்கள் பரிசுத் தொகையாக வழங்கப்பட்டது. இது இந்திய ரூபாய் மதிப்பில் தோராயமாக ரூ.16,778 ஆகும். இந்த விவகாரம் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. இதுதொடர்பாக நெட்டிசன்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளனர். அதில் ஒருவர், `சர்வதேச கிரிக்கெட் தொடர்களில் ஸ்பான்சர்கள் ஒரே மாதிரி இருக்கும்போது மகளிர் கிரிக்கெட் போட்டிகளில் வழங்கப்படும் பரிசுத் தொகை மட்டும் குறைவாக இருப்பது ஏன்? ஆண்கள் கிரிக்கெட்டில் கொடுக்கப்படும் பரிசுத் தொகையைவிட இது மிகவும் குறைவு’ என்று தெரிவித்துள்ளார். மற்றொருவரோ, `பிளேயர் ஆஃப் தி மேட்ச் விருதுக்கு 250 அமெரிக்க டாலர்கள்தான் பரிசுத் தொகையா? உள்ளூர் தொடரான ரஞ்சிக் கோப்பையில் இதைவிட அதிகமான பரிசுத் தொகை கொடுப்பார்கள். இது மிகப்பெரிய அவமரியாதை’’ என்று காட்டமாகக் கருத்து தெரிவித்துள்ளார்.