பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தரவிற்கு வெளிநாட்டு தூதர் பதவி வழங்குவதாக அரசாங்கம் வாக்களித்துள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல்களை தடுக்க தவறியமைக்கு பொறுப்பேற்று பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ, பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர ஆகியோரை பதவி விலகுமாறு ஜனாதிபதி பணித்திருந்தார். தாக்குதல் முன்னெச்சரிக்கை முறைப்படி ஜனாதிபதி, பிரதமருக்கு பகிரப்படவில்லையென்றும் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
பாதுகாப்பு செயலர் உடனடியாக பதவி விலகிவிட்டார். எனினும், பொலிஸ்மா அதிபர் இதுவரை பதவிவிலகவில்லை.
பதவி விலகுமாறு கோரப்பட்ட சமயத்தில், வெளிநாட்டு தூதர் பதவி வழங்கப்படும் என்ற தகவல் ஜனாதிபதி செயலகத்தால் தெரிவிக்கப்பட்டது என்று அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதேவேளை, ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சி தலைவர் ஆகியோரும் பொலிஸ்மா அதிபரின் பதவி விலகல் குறித்து ஆலோசித்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் ஊடகப்பிரதானிகளுடனான சந்திப்பில், பொலிஸ்மா அதிபர் 24 மணி நேரத்தில் பதவிவிலகுவார் என ஜனாதிபதி தெரிவித்திருந்தார். எனினும், இதுவரை அவர் பதவிவிலகவில்லை.
அவர் பதவிவிலகாத பட்சத்தில் கட்டாய விடுப்பில் அனுப்பி வைக்கப்படும் சாத்தியம் உள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.