“நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி பதவியில் பைத்தியக்காரன் ஒருவன் அமர்ந்தால் என்ன நடக்கும் என்று என்.எம்.பெரேரா எழுப்பிய கேள்விக்கு நாற்பது ஆண்டுகளின் பின்னர் மைத்திரிபால சிறிசேன பதில் கொடுத்துவிட்டார்.” என்று மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) தெரிவித்துள்ளது.
“புத்தகங்களில் அறிந்துகொள்ள முடியாத விடயத்தை கடந்த ஐம்பது நாட்களில் அனுபவம் மூலமாக மக்கள் உணர்ந்துவிட்டனர். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்கும் இறுதி சந்தர்ப்பம் இப்போது ஏற்பட்டுள்ளது. அதனை அனைவரும் இணைந்து நீக்க வேண்டும்.” என்றும் அந்தக் கட்சி குறிப்பிட்டுள்ளது.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் நலிந்த ஜெயதிஸ்ஸ, நிறைவேற்று அதிகாமுள்ள ஜனாதிபதி முறைமையை நீக்கும் சபை ஒத்திவைப்புவேளைப் பிரேரணையை சமர்ப்பித்து உரையாற்றினார். அதன்போதே, அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “நிறைவேற்று அதிகாரத்தை வைத்துக்கொண்டு கடந்த சில நாட்களாக நிறைவேற்று அதிகாரி எவ்வாறு செயற்பட்டார், மக்கள் ஆணையை எவ்வாறு எட்டியுதைத்து தன்னிச்சையாக செயற்பட்டார் என அவதானிக்க முடிந்தது.
கடந்த சில நாட்களாக அவர் நடந்துகொண்ட விதம் எவ்வாறு என்பது அறிய முடிந்தது. கடந்த 50 நாட்களாக நாட்டின் ஜனநாயகத்திற்கும் , மக்கள் ஆணைக்கு அமைய ஜனாதிபதி செயட்பட்டாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதனை அடுத்து இனியும் நிறைவேற்று அதிகாரம் அவசியமாக என்ற கேள்வியும் எழுந்துள்ளது. நிறைவேற்று அதிகாரம் கொண்டவரப்பட்டபோது “இந்த ஆசனத்தில் பைத்தியக்காரன் அமர்ந்தால் என்ன ஆகும்?” என என்.எம்.பெரேரா ஒருமுறை ஒருமுறை கேட்டாராம். ஆனால் அப்போது எம்மால் அதனை உணர முடியவில்லை. ஆனால் இன்று மைத்திரிபால சிறிசேன அதனை நிருபித்து விட்டார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே மஹிந்த ராஜபக்ஷவை தாக்கியுள்ளார். இப்போதாவது இவற்றை அனைவரும் விளங்கிக்கொள்ளுங்கள். 20ஆம் திருத்தத்தில் மாற்றுத் திருத்தங்கள் எதனையும் செய்ய வேண்டும் என்றால் அதனை செய்வோம். வாக்கியங்களில் குறைகள் இருப்பின் அதனை நிவர்த்தி செய்வோம், ஆனால் நிறைவேற்று முறைமையினை தொடர்ந்தும் தக்கவைக்க வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்.” என்றுள்ளார்.