உள்ளூராட்சிச் சபைத் தேர்தலை விரைவாக நடத்துவதே அரசாங்கத்தின் நோக்கமெனக் குறிப்பிட்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அனைவரும் ஏற்றுக்கொள்ளும் புதிய முறையொன்றின் கீழ் தேர்தல் நடத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
தேர்தல் முறை தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள திருத்தங்களில் தேவையற்ற அல்லது முரணானவற்றை நீக்கிவிட்டு பொருத்தமானவற்றை சேர்த்துக்கொள்ள முடியுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தெரிவுக்குழுவின் மூலம் சிக்கல்களை நிவர்த்திக்கலாமெனவும் இது தொடர்பில் எவரும் குழப்பமடையத் தேவையில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
உள்ளூராட்சி சபைத் தேர்தல் சட்டமூலம் தொடர்பான விவாதம் இன்று நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள நிலையில், அதில் மேற்கொள்ளப்படவேண்டிய திருத்தங்கள் தொடர்பில் நேற்றுச் சபையில் சர்ச்சசைகள் எழுந்தன இதன்போதே பிரதமர் இந்த விடயங்களைக் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த சபை முதல்வர் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல, உள்ளூராட்சி தேர்தல் திருத்தச் சட்டமூலம் மீதான விவாதத்தை அடுத்து வாக்கெடுப்பு நடத்தப்படுமென பதிலளித்தார்.
இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் அநுர குமார திஸாநாயக்க, டளஸ் அழகப்பெரும, வாசுதேவ நாணயக்கார ஆகியோர் குறித்த சட்டமூலத்தில் முறையான திருத்தம் மேற்கொள்ளப்படவேண்டும் என்றும் தற்போது உள்ளடக்கப்பட்டுள்ள திருத்தங்கள் தமது பார்வைக்கு வழங்கப்படுவது அவசியமென்றும் வலியுறுத்தினர்.
இதன்போது கருத்துத் தெரிவித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க, கடந்த அரசாங்கத்தின்போது இதில் பொருத்தமற்ற விடயங்கள் உள்ளடக்கப்பட்டமையே தேர்தல் தாமதமாககாரணம் என்றும், தற்போது 55 திருத்தங்கள் முன்வைக்கப்பட்டுள்ளதால் தேர்தல் ஆணைக்குழுவும் இதற்கான திருத்தங்களை முன்வைத்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.