மொழிப் பிரச்சினையைத் தீர்ப்பதன் ஊடாக தேசிய பிரச்சினையில் 51 வீதத்திற்கு தீர்வுகண்டுவிட முடியுமென தேசிய சகவாழ்வு, அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
சிங்கள மொழிகளைக்கொண்ட செயற்றிட்டங்களின் பெயர்களை அதே உச்சரிப்புடன் தமிழர்களும் உச்சரிக்க வேண்டுமென எதிர்பார்ப்பது தவறு எனவும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்றில் நேற்றைய தினம் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அமைச்சர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
மொழிப் பிரச்சினையைத் தீர்க்கும் வகையில் அரசாங்க நிறுவனங்களில் உள்ள சகல படிவங்களையும் தமிழ் மொழியில் மொழிமாற்றம் செய்வதற்கு நடவடிக்கை எடுத்திருப்பதோடு, நாடு முழுவதிலும் 3,300 மொழி அதிகாரிகளை நியமிக்க நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டின் அரசியலமைப்புக்கு அமைய சிங்களமும், தமிழும் ஆட்சி மொழிகளாக இருப்பதாகவும், இவ்வாறான நிலையில் அரசாங்கத்தின் சில செயற்றிட்டங்களுக்கு வைக்கப்படுகின்ற சிங்கள பெயர்களை, தமிழ் மக்களும் அவ்வாறே உச்சரிக்க வேண்டும் எனக் கூறுவது சட்டவிரோதமானது என வலியுறுத்தினார்.
தேசிய மொழியை தமிழ் மொழியில் பாடமுடியாத நிலைமையொன்று காணப்பட்டதாகவும், எனினும், இந்த நிலை மாறியிருப்பதாகவும், இதனால் தமிழர்களும் இலங்கையர் என்ற ஏற்படுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்படுகின்ற சகல சிங்கள பெயரைக் கொண்ட செயற்றிட்டங்களுக்கும் பொருத்தமான தமிழ் மொழிபெயர்ப்பை வழங்க எதிர்பார்த்துள்ளதாகவும், எல்லா அமைச்சர்களும், அமைச்சுக்களும் தமது செயற்றிட்டங்களுக்கு சிங்கள மொழியில் பெயரை வைக்கும்போது அவற்றுக்கான தமிழ் பெயரை கண்டுபிடித்து வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கத் தீர்மானித்துள்ளதாகவும் அமைச்சர் மனோ கணேசன் கூறியுள்ளார்.