அரசியல் கைதிகள் விடயத்தில் நீதி அமைச்சே இறுதித் தீர்மானம் எடுக்க வேண்டும். எனது அமைச்சுக்கு அது தொடர்பான அதிகாரம் இல்லை.
இவ்வாறு சிறைச்சாலைகள் மறு சீரமைப்பு, மீள்குடியேற்றம் மற்றும் மறுவாழ்வு அமைச் சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம், குளப்பிட்டியில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த மாணவன் ஒருவரின் குடும்பத்துக்கு வழங்கப்படவுள்ள வீட்டுக்கு அடிக்கல் நடும் நிகழ்வு நடைபெற்றது.
அதில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோது அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் தெரிவித்ததாவது-:
இது தொடர்பில் பல தடவைகள் நான் நீதி அமைச்சரிடம் கலந்துரையாடியுள்ளேன். அரசியல் கைதிகள் பல ஆண்டுகளாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இதற்கு ஒரு முடிவு காண வேண்டும் என்பதே எனது விருப்பம். எனக்கு அதிகாரம் இருந்திருந்தால் உடனடியாக நான் இதைச் செய்திருபேன்.
சட்டமா அதிபர் திணைக்களத் தினருடன் பேசி எதற்காக வழக்குகள் தாமதமடைகின்றன என்பது தொடர்பில் அறிந்து தெரியப்படுத்துகின்றேன்.
காணி விடுவிப்பு
இராணுவத்தினரின் வசமுள்ள சில காணிகள் டிசெம்பர் மாதத்துக்குள் விடுவிக்கப்படும். யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் உள்ள காணிகளே இவ்வாறு விடுவிக் கப்படவுள்ளன.
இராணுவத்தினரும் எம்முடன் ஒத்துழைத்து எத்தனையோ காணிகளை விடுவித்துள்ள னர். அதை மறுப்பதற்கில்லை.
கேப்பாபிலவில் காணி விடுவிப்புக்கான நிதி தொடர்பான அமைச் சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கட்டுள்ளது. விரைவில் திறைசேரி யில் இருந்து நிதி பெறப்பட்டு வழங்கப்படும். அதன்பின்னர் அந்தக் காணிகள் விடுவிக்கப் படும் – என்றார்.