பிணைமுறி மோசடியுடன் தொடர்புடைய பேர்பச்சுவல் ட்ரசரிஸ் நிறுவனம் 2016ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் 2017ஆம் ஆண்டு மார்ச் வரையான காலப்பகுதிக்குள் முறைகேடான வகையில் 12 ஆயிரத்து 500 மில்லியன் ரூபா இலாபமீட்டியுள்ளதால் அது தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு இரண்டாவது அரச தலைவர் ஆணைக்குழுவை நியமிக்குமாறு ஊழல் எதிர்ப்புக்குழு அரச தலைவரிடம் நேற்று கோரிக்கை விடுத்தது.
2015ஆம் ஆண்டு பெப்ரவரி முதல் 2016ஆம் ஆண்டு மார்ச் 31 வரையான காலப்பகுதிக்குள் இடம்பெற்ற மோசடியை விசாரிக்கும் அதிகாரமே அரச தலைவரால் நியமிக்கப்பட்ட முதலாவது ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டிருந்தது.
பிணைமுறி மோசடியின் பிரதான சூத்திரதாரியாகக் கருதப்படும் அர்ஜுன மகேந்திரன், 2016ஆம் ஆண்டு ஜூலை மாதம் வரை மத்திய வங்கி ஆளுநராகப் பதவிவகித்துள்ளார். 2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதியும் விசாரிக்கப்படவேண்டும் என்பதற்காகவே புதிய விசாரணை ஆணைக்குழு கோரப்பட்டுள்ளது.ஊழல் எதிர்ப்புக்குழுவின் ஊடகவியலாளர் மாநாடு நேற்று முற்பகல் கொழும்பில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே முன்னணியின் ஏற்பாட்டாளர் வசந்த சமரசிங்க மேற்கண்டவாறு கோரினார். அவர் மேலும் தெரிவித்ததாவது,
நாட்டில் எழுந்துள்ள பிரச்சினைகள் தொடர்பில் எந்தத் தரப்புடனும் நேரில் கலந்துரையாடுவதற்கு நான் தயாராகவே இருக்கின்றேன் என்று அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன அண்மையில் அறிவித்திருந்தார்.
பிணைமுறி விவகாரம் தொடர்பில் அரச தலைவரை நேரில் சந்தித்துக் கலந்துரையாடுவதற்கு ஊழல் எதிர்ப்புக்குழு தயாராகவே இருக்கின்றது. இதற்கான நேரத்தை ஒதுக்கித்தருமாறு கோரி அரச தலைவருக்கு கடிதம் அனுப்பிவைக்கப்படும்.
கடிதத்தில் நான்கு காரணிகள் உள்ளடக்கப்பட்டுள்ளன. பிணைமுறி மோசடி தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்டஆணைக்குழுவுக்கு 2015ஆம் ஆண்டு பெப்ரவரி முதல் 2016ஆம் ஆண்டு மார்ச் 31 வரையான காலப்பகுதியை மட்டுமே விசாரிக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
பிணைமுறி மோசடியால் 2016ஆம் ஆண்டு ஏப்ரல் முதலாம் திகதி முதல் செப்ரெம்பர் 30ஆம் திகதி வரையான காலப்பகுதியில் அலோசியஸின் நிறுவனம் 6 ஆயிரத்து 816 மில்லியன் ரூபா இலாபமீட்டியுள்ளது.
2016ஆம் ஆண்டு ஏப்ரல் முதலாம் திகதிமுதல் 2017ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் திகதி வரையான காலப்பகுதி குறித்து விசாரிக்க இரண்டாவது அரச தலைவர் ஆணைக்குழுவை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.
பிணைமுறி விசாரணை அறிக்கையில் 106 பக்கங்கள் வெளியிடப்படவில்லை. அவற்றிலுள்ள விவரங்களை நாட்டுக்குப் பகிரங்கப்படுத்தவேண்டும்.
பிணைமுறி மோசடியால் 2015ஆம் ஆண்டு பெப்ரவரி முதல் 2016ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் திகதிவரை 11 ஆயிரத்து 500 மில்லியன் ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளது. இழந்த தொகையில் பெரும்பகுதி ஊழியர் சேமலாப நிதியத்துக்குரியதாகும். அந்தத் தொகையை மீளப்பெற அரச தலைவர் தலையீடு செய்யவேண்டும்.
காசோலை பெற்றுள்ள 166 பேரின் விவரங்கள் வெளிப்படுத்தப்படவேண்டும். மேற்படி காரணங்கள் தொடர்பில் அரச தலைவருடன் பேச்சு நடத்தி எமது குழுவின் தேசிய நிறைவேற்றுக்குழு உறுப்பினர்கள் தயாராகவே இருக்கின்றனர். திகதியை அரச தலைவர் வழங்கவேண்டும் – என்றார்.
அதேவேளை, 2005ஆம் ஆண்டுமுதல் இடம்பெற்றதாகக் கூறப்படும் பிணைமுறி மோசடி தொடர்பில் விசாரிக்க தனியானதொரு ஆணைக்குழுவை அமைக்குமாறும் அவர் கோரிக்கை விடுத்தார்.