முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கேப்பாப்பிலவில், இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்கக் கோரி மக்கள் முன்னெடுத்து வரும் இரண்டாவது கட்ட தொடர் கவனயீர்ப்பு போராட்டம் இன்று (14) செவ்வாய்க்கிழமை 21ஆவது நாளாகவும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இன்றைய போராட்டத்திற்கு கிழக்கு மாகாண காணி மீட்புக்கான வலையமைப்பு அணியினர் நேரில் கலந்துகொண்டு தமது ஆதரவினை வெளிப்படுத்தி கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். தமது பூர்வீக நிலங்களையும் வாழ்வாதாரத்தையும் இழந்த கேப்பாப்பிலவு மக்கள், பல ஆண்டுகளாக அமைதியான ஜனநாயக வழியில் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
தங்களது சொந்த நிலங்களில் மீளக் குடியேறவும், விவசாயம் உள்ளிட்ட வாழ்வாதார நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் முடியாத நிலை காரணமாக அவர்கள் தொடர்ந்தும் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக தெரிவிக்கின்றனர்.
கேப்பாப்புலவு பூர்வீகக் காணிகள் தொடர்பான நீண்டகால பிரச்சினைக்கு இதுவரை நிரந்தரமான தீர்வு எட்டப்படாத நிலையில், தங்களது உரிமைகளை மீண்டும் வலியுறுத்தும் நோக்கில் மக்கள் இரண்டாவது கட்ட போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
இப்போராட்டம் இன்றுறைய தினம் 21ஆவது நாளாகவும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
கேப்பாப்பிலவில் 55 குடும்பங்களுக்கு சொந்தமான 59.5 ஏக்கர் பூர்வீக வாழ்விடக் காணிகள் நீண்டகாலமாக இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் உள்ள குறித்த காணிகளை உடனடியாக மக்களிடம் மீள ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியே இந்த தொடர் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
கேப்பாபிலவு மக்களினுடைய பூர்வீக காணிகள் விடுவிக்கப்படும்வரை அவர்களால் முன்னெடுக்கப்படும் போராட்டத்திற்கு வலுசேர்க்கும் வரை வடகிழக்கு மாகாணங்களில் இருக்கும் சிவில் அமைப்புக்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மற்றும் அரசியல் வாதிகள் தொடர்ச்சியாக தமது ஆதரவினை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை கிழக்கு மாகாண காணி மீட்புக்கான வலையமைப்பு அணியினர் இதன் போது வலியுறுத்தியிருந்தனர்.









