அக்கரபத்தனை பெல்மோரல் தோட்டத்தில் கடந்த வருடம் ஜுன் மாதம் 13 ம் திகதி தீ விபத்தால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கான வீட்டுத்திட்டம் குறித்து, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
அவரது ஊடக அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தீ விபத்தில் பாதிக்கப்பட்ட வீடுகளை இழந்தவர்களுக்கு புதிய வீடுகளை அமைத்துக் கொடுக்கும் வகையில் அத்தோட்ட நிர்வாகம் சம்மந்தப்பட்ட அமைச்சுகள், இடர் முகமைத்துவ நிலையங்கள் உட்பட பல அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளது.
பாதிக்கபட்ட மக்களுக்கு குடியிருப்புகளை அமைத்துக் கொடுப்பதற்காக தோட்ட நிர்வாகம் குடியிருப்புகளை நிர்மாணிப்பதற்கான காணிகளையும் ஒதுக்கியுள்ளது.
இந்த நிலங்களில் வீடமைப்பதற்கு உகந்ததா? என்பதற்காக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிலையத்தின் சான்றிதழ்களும் பெறப்பட்டு அச்சான்றிதழ்களை பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ஆனால் இதுவரை காலமும் பாதிக்கபட்ட மக்களுக்கு வீடமைத்து கொடுப்பதில் கவனம் செலுத்தப்படவில்லை என்று அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.