இலங்கையில் ஜனநாயகமும் சட்டத்தின் ஆட்சியும் வீழ்ச்சியடையும் போதெல்லாம் அதிகமாகப் பாதிக்கப்படுவது தமிழ், முஸ்லிம் மக்களே என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
ஊடகமொன்று வழங்கிய செவ்வியொன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அந்தச் செவ்வி வருமாறு,
கேள்வி – தற்போது பாராளுமன்றை ஜனாதிபதி கலைத்தமை அரசியல் யாப்பிற்கு விரோதமானது என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தமையின் அடிப்படையில் ஜனாதிபதி தவறு இழைத்தமை உறுதி செய்யப்படுகின்றது. எனவே ஜனாதிபதிக்கு எதிராக அவர் ஜனாதிபதி பதவிக்கு தகுதியற்றவர் என வழக்குத் தாக்கல் செய்ய முடியுமா?
பதில் – ஜனாதிபதிக்கு எதிராக வழக்குத் தொடரமுடியாது. ஆனால் பாராளுமன்றில் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவர முடியும். அவ்வாறு ஜனாதிபதிக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தைக் கொண்டுவருவதற்கு பல காரணங்கள் உண்டு. அதில் ஒன்று ஜனாதிபதி அரசியல் யாப்பினை வேண்டுமென்றே அல்லது தெரிந்தே மீறினார் என்பதன் அடிப்படையிலேயே கொண்டு வர முடியும். இங்கே தற்போது ஜனாதிபதி அரசியல் யாப்பினை மீறினாரா, இல்லையா என்ற சந்தேகத்திற்கு அப்பால் மிகத் தெளிவாக யாப்பிற்கு எதிராகச் செயல்பட்டார் என உயர்நீதிமன்றமே தீர்ப்பளித்து விட்டது. இதன் அடிப்படையில் ஜனாதிபதிக்கு எதிராக பாராளுமன்றில் நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை முன்கொணர்ந்தால் அதன்போது அரசியல் யாப்பை மீறினாரா இல்லையா என்ற வாதமே அவசியம் இல்லாது போய்விடும்.
கேள்வி – இந்த வழக்கில் நீங்கள் காட்டிய அக்கறையினை தமிழ் மக்களின் அவசிய விடயங்களான நில விடுவிப்பு, காணாமல் போனோர் விடயம், திணைக்களங்களின் நில அபகிரிப்புக்களில் காட்டவில்லை எனக் கூறப்படுகின்றதே அது தொடர்பில் என்ன கூறுகின்றீர்கள்?
பதில் – தமிழ் மக்களின் நில விடுவிப்புக்கள் தொடர்பில் 2003ஆம் ஆண்டு முதல் முதல் பல வழக்குகளை நடாத்தியுள்ளோம். அதேபோல் பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிரான வழக்கிலும் பங்குகொண்டோம். அதேபோல் எமது மக்களிற்கு பாதிப்பான திவுனகம வழக்கிலும் பங்கு கொண்டோம். இதில் நாம் வெற்றியீட்டியதனாலேயே எமக்கு சாதகமாகத் தீர்ப்பு வழங்கிய அன்றைய உயர்நீதிமன்ற முதன்மை நீதியரசர் சிராணி பண்டாரநாயக்காவிற்கு நடந்தது இந்த நாடு மட்டுமல்ல உலகமே அறியும்.
கேள்வி – இந்தத் தீர்ப்பானது சிங்கள தேசத்திற்கும் சிங்கள மக்களிற்கும் நன்மை பயக்கும் அதேநேரம் எந்த வகையிலும் தமிழ் மக்களுக்கு இதனால் நன்மை கிட்டாது, ஏனெனில் எந்த சிங்களத் தலைவர் ஆண்டாலும் தமிழர்களின் நிலை இதுதான் எனக் கூறப்படுவது தொடர்பில் என்ன கருதுகின்றீர்கள்?
பதில் – சிங்கள மக்கள் மட்டுமே நன்மை அடைவர் என்பது தவறான எண்ணம். ஏனெனில் இந்த நாட்டில் ஜனநாயகம் மற்றும் சட்டத்தின் ஆட்சி வீழ்ச்சி அடையும்போதெல்லாம் பாதிப்படைவது சிங்கள மக்களை விடவும் அதிகம் பாதிப்டைவது சிறுபான்மையினரே! அதனாலும் ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டிய தேவை உள்ளது. இவ்வாறு இந்த நாடு முழுவதற்குமான ஜனநாயகத்தை நிலைநாட்டியதில் எமது மக்களிற்கும் பாரிய பங்குண்டு என்பதனை யாரும் மறுக்க முடியாது