திஹாரி ஜுனைட் மாவத்தையிலுள்ள பள்ளிவாயலின் மேல் மாடியில் இன்று (25) அதிகாலை ஏற்பட்ட தீயினால் அப்பள்ளிவாயலில் இயங்கிவந்த பாதிஹ் உயர் கல்வி நிறுவனத்தின் மாணவர் விடுதி முழுமையாக அழிவுற்றிருப்பதாக நிட்டம்புவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று அதிகாலை 3.00 மணியளவில் இந்த தீச்சம்பவம் ஏற்பட்டுள்ளது. இங்கு காணப்பட்ட மாணவர்கள் உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டதனால், எந்தவித உயிர் ஆபத்துக்களும் இடம்பெறவில்லையெனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
உயர் கல்வி நிறுவனமான இக்கல்வி நிறுவனத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வருகை தந்த 35 மாணவர்கள் தங்கியிருந்து கல்வி கற்று வந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். கம்பஹா மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவு இந்த தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளது.
விடுதியில் காணப்பட்ட கட்டில்கள் உட்பட அனைத்துப் பொருட்களும் தீயில் அழிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. சேதவிபரம் இதுவரையில் மதிப்பிடப்படவில்லையெனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
முதலாம் மாடியில் ஏற்பட்ட தீ கீழ் மாடிக்கு பரவுவதற்கு முன்னர், கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், மேல் மாடியின் கூரைக்கும் அதிக சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.
தீக்கான காரணம் மின் கசிவா, வேறு நாசகார நடவடிக்கைகளா என்பது இதுவரையில் தெரியவில்லையெனவும் கூறப்படுகின்றது. தீக்கான காரணத்தைக் கண்டறிவதற்கு குற்றத் தடுப்பு பரிசோதனை அதிகாரிகள் அழைக்கப்பட்டுள்ளதாகவும் நிட்டம்புவ பொலிஸார் அறிவித்துள்ளனர்.
இதேவேளை, கையடக்கத் தொலைபேசியை சார்ஜ் செய்வதற்கு போட்டதனால் ஏற்பட்ட மின் ஒழுக்கு இந்த தீயிற்குக் காரணமாக இருந்திருக்கலாம் என சந்தேகிப்பதாக அந்நிறுவனத்தின் உறுப்பினர் ஒருவர் எமது டெய்லி சிலோனிடம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.