ஜனாதிபதித் தேர்தலில் ஏற்படப் போகும் படுதோல்வியை அறிந்த ஐக்கிய தேசியக் கட்சி கோட்டாபய ராஜபக்ஸவை சிறைப்படுத்தியாவது வேட்பாளர் பதவியிலிருந்து அவரை நீக்கிக் கொள்வதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ குற்றம்சாட்டியுள்ளார்.
கோட்டாபய ராஜபக்ஸவின் மீது பொய்யான குற்றச்சாட்டுக்களை சோடித்து அவரது வெற்றியைத் தடுக்க முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.
நாம் எமது வேட்பாளரை வேண்டா வெறுப்புடன் பெயரிடவில்லை. தகுதி இருக்கின்றதா? என நன்கு கண்டறிந்தே அறிவித்தோம். ஐக்கிய தேசியக் கட்சி கோட்டாபயவை சிறைப்படுத்த தயாராகி வருகின்றது. இவ்வளவு அச்சப்படுவது ஏன்? எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மக்கள் தங்களுடன் இருப்பதாக கூறுவதாயின், மக்களின் கருத்துக்கு மதிப்பளிக்க தெரிந்துகொள்ள வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
கொழும்பு புதிய நகர மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே எதிர்க் கட்சித் தலைவர் இதனைக் கூறியுள்ளார்.