எதிர்வரும் மார்ச் மாதம் பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் நடைபெறவுள்ள பங்கபந்து கபடி சம்பியன்ஷிப் போட்டித் தொடருக்கான இலங்கை கபடி அணியில் 5 தமிழ் பேசும் வீரர்கள் இடம்பெற்றுள்ளதுடன், அணித்தலைவராக அம்பாறையைச் சேர்ந்த அஸ்லம் சஜா நியமிக்கப்பட்டுள்ளார்.
இப்போட்டித் தொடரில் பங்கேற்கும் இலங்கை கபடி அணி கயின் தலைவரான அஸ்லம் சஜா, நிந்தவூர் அல் மதீனா விளையாட்டுக் கழகத்தின் முன்னணி வீரர் ஆவார். இவரைத் தவிர, மொஹமட் சபிஹான, மொஹமட் நப்ரீஸ் ஆகிய இருவரும் அல் மதீனா விளையாட்டுக் கழகத்திலிருந்து தெரிவான ஏனைய இரண்டு வீரர்களாவார்.
மட்டக்களப்பு தன்னாமுனை சென்ட். ஜோசப் விளையாட்டுக் கழகத்தின் பென்ஸி ராசோவும், மட்டக்களப்பு கிறீன் கெலக்ஸி விளையாட்டுக் கழகத்தின் ஏ. மோகன்ராஜும் 12 பேர் கொண்ட் இலங்கை கபடி குழாத்தில் இணைக்கப்பட்ட தமிழ் பேசும் வீரர்களாவர்.
மூன்றாவது பங்கபந்து சர்வதேச கபடி சம்பியன்ஷிப் போட்டித் தொடர் பங்களாதேஷின் தலைநகர் டாக்காவில் எதிர்வரும் மார்ச் மாதம் 11ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இப்போட்டித் தொடரில், போட்டி ஏற்பாடு நாடான பங்களாதேஷ், இலங்கை, இங்கிலாந்து, நேபாளம், மலேஷியா, ஈராக், இந்தோனேஷியா, தாய்லாந்து, சீன தாய்ப்பே ஆர்ஜென்டீனா, கென்யா, போலாந்து ஆகிய 12 நாடுகள் பங்கேற்கவுள்ளன.
இந்நிலையில், பங்கபந்து கபடி சம்பியன்ஷிப்பில் போட்டித் தொடரில் பங்கேற்கும் இலங்கை கபடி அணி விபரம் வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கை கபடி அணி விபரம்:
அஸ்லம் சஜா (தலைவர்), அஷான் மிஹிரங்க (உப தலைவர்),ஏ. மோகன்ராஜ், துலான் மதுவன்த,மொஹமட் சபிஹான், மொஹமட் நப்ரீஸ், உசித்த சஞ்சய, மஹேஷிக ஜயவிக்ரம, பென்சி ராசோ, நிரூத பத்திரண, இந்துனில் வசன்த, அகில லக்சான், நதீக்க செல்லஹேவா (பயிற்றுநர்) இந்திரதிஸ்ஸ தேதுனுபிட்டிய (அணி முகாமையாளர்), பீ.முகுந்தன் (தொழில்நுட்ப அதிகாரி)