திருப்பதியில் கேரள மருத்துவர் ஒருவருக்கு நிபா வைரஸ் அறிகுறி இருப்பதாக பரவிய தகவல் குறித்து அதிகாரிகள் விளக்கமளித்தனர்.
கேரளத்தைச் சேர்ந்த ஒரு பெண் மருத்துவர் அங்கு நிபா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்தார். அவர் திருமணத்திற்காக திருப்பதிக்கு வந்தார். விதிமுறைகளின்படி நிபா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த பின் வெளியூர் செல்ல அனுமதி பெற்றாக வேண்டும். ஆனால் அவர் அனுமதியில்லாமல் திருப்பதிக்கு வந்துள்ளார்.
இதுகுறித்து கேரள அரசு உடனடியாக ஆந்திர அரசிற்கு தகவல் அளித்தது. அதைத் தொடர்ந்து, ஆந்திர அரசு, சித்தூர் மாவட்ட ஆட்சியருக்கு தகவல் அளித்து அந்தப் பெண் மருத்துவரை மருத்துவமனையில் அனுமதித்து ரத்தப் பரிசோதனை செய்ய உத்தரவு பிறப்பித்தது.
அதன்படி, அவரை திருப்பதியில் உள்ள ரூயா மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை காலை அனுமதித்தனர். அங்கு அவரை மருத்துவர்கள் சோதனை செய்தனர். இந்தச் சோதனையில், அவருக்கு நிபா நோய்த் தொற்று இல்லை என்பது நிரூபணமானது. அவரை மருத்துவமனையில் தனியறையில் கண்காணிப்பில் வைத்துள்ளனர்.
கேரள பெண் மருத்துவ கண்காணிப்பில் வைத்துள்ளதால் அவருக்கு நிபா வைரஸ் தாக்கியிருப்பதாக தகவல்கள் பரவின. இதையடுத்து மாவட்ட சுகாதாரதுறை அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு விரைந்து வந்து இதுகுறித்த உண்மை விவரங்களை செய்தியாளர்களிடம் விளக்கிக் கூறினர்.