இலங்கையில் சமூகங்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துதல், பொறுப்புக்கூறலை முன்னெடுத்தல் ஆகியவற்றை பிரதான இலக்காகக் கொண்டு 2015ல் நிறைவேற்றப்பட்ட ஜெனிவா தீர்மானத்தை முழுமையாக நடைமுறைக்கிடப்படுவதை உறுதிப்படுத்தும் வகையில் அழுத்தங்களைக் கொடுக்குமாறு அமெரிக்காவிடம் வலியுறுத்துவதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் அமெரிக்கா பயணமாகியுள்ளார்.
நேற்று அதிகாலை நியுயோர்க் நோக்கி சுமந்திரன் பயணமானதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஊடகப் பிரிவினர் உறுதிப்படுத்தினர்.
கனடிய தமிழ் காங்கிரஸ் ,அமெரிக்க தமிழர் அரசியற் செயலவை , உலகத் தமிழர் பேரவை ஆகியவற்றின் அங்கத்தவர்களுடன் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த தமிழர் பிரதிநிதியும் சுமந்திரனுடன் அமெரிக்காவில் இணைந்துகொண்டு அமெரிக்க இராஜாங்கத்திணைக்க அதிகாரிகளுடனான சந்திப்பில் பங்கேற்கவுள்ளனர்.
நியூயோர்க் நகரில் அமைந்துள்ள ஐநாவிற்கான அமெரிக்க தூதரகத்தில் முக்கிய அதிகாரிகளுடன் நாளை திங்கட்கிழமை பேச்சுவார்த்தைகள் இடம்பெறவுள்ளது. ஐக்கியநாடுகள் சபைக்கான அமெரிக்கத்தூதுவர் நிக்கி ஹாலே உட்பட முக்கிய அதிகாரிகளுடன் சுமந்திரன் தலைமையில் புலம்பெயர் தமிழர் குழுவினர் முக்கியமான பேச்சுவார்த்தைகளை நடத்துவர் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நியுயோர்க்கில் சந்திப்புக்களை முடித்துக்கொண்டு வொஷிங்டன் புறப்பட்டுச் செல்லும் சுமந்திரன் தலைமையிலான தமிழர் தரப்பினர் ,அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில், தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவிச் செயலர் அலிஸ் வெல்ஸ்சுடன், நாளை மறுதினம் செவ்வாய்க் கிழமை பேச்சு நடத்தவுள்ள்னர். நிஸா பிஷ்வாலுக்குப் பின்னர் இந்தப்பதவியை அலிஸ் வெல்ஸ் வகித்துவருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.
இந்தச் சந்திப்புக்களின் போது ஜெனிவா தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் தவறும் இடத்து அதனை நடைமுறைப்படுத்துவதற்கான மாற்றுவழிகளை முன்னெடுக்குமாறு அமெரிக்கத்தரப்பினரிடம் சுமந்திரன் தலைமையிலான தமிழர் தரப்பினர் வலியுறுத்தவுள்ளனர்.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், இலங்கை தொடர்பாக 2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இலங்கை அரசாங்கம் முழுமையாக நடைமுறைப்படுத்தத் தவறியுள்ளது.
இந்தத் தீர்மானம் நடைமுறைப்படுத்தப்படும் விதம் குறித்து, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் அல் ஹுசேன் வரும் 21ஆம் நாள் பேரவையில் வாய்மொழி அறிக்கையை சமர்ப்பிக்கவுள்ளார். அதன் முற்கூட்டிய பிரதியை அவர் ஏற்கனவே வெளியிட்டிருந்தார்.
அதில், ஜெனிவா தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதில் இலங்கை அரசு இழுத்தடிப்புச் செய்வதாகவும், இதனால், மாற்று வழிகள் குறித்து பரிசீலிப்பதற்கு உறுப்பு நாடுகளுக்குப் பரிந்துரைப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையிலேயே ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் பரிந்துரைப்படி, ஜெனிவா தீர்மானத்தை நடைமுறைப்படுத்தவதற்கான அழுத்தத்தை அதற்குக் கொடுக்கும் நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா தலைமை தாங்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தவுள்ளது.
இந்த விடயம் தொடர்பாக ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள சுமந்திரன்,
‘ இலங்கை பொறுப்புக் கூறல் விடயத்தில் எதுவும் செய்யவில்லை. இதனால் இந்த விவகாரத்தை அடுத்த கட்டத்துக்கு நகர்த்துவதற்காக, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை மீது உலகளாவிய நியாயாதிக்கத்தை அழுத்துவதற்கு உறுப்பு நாடுகளைத் தான் ஊக்குவிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
சில நாடுகளில், வேறு நாடுகளின் போர்க் குற்றவாளிகளைக் கைது செய்து விசாரிக்கவும் தண்டனை வழங்கவும் சட்ட ஏற்பாடுகள் உள்ளன. அதனை அந்தந்த நாடுகள் செயற்படுத்த வேண்டும்.
இதுவே ஆணையாளர் வலியுறுத்தும் உலகளாவிய நியாயாதிக்கம். இதனை ஐ.நா. மனித உரிமைகள் சபையினால் நேரடியாகச் செயற்படுத்த முடியாது.
எனவே அதனைச் செய்வதற்கு அமெரிக்க தலைமையேற்க வேண்டும். போர்க் குற்றவாளிகளைத் தண்டிப்பதற்கான சட்ட ஏற்பாடுகள் உள்ள ஏனைய நாடுகளும் அதனைச் செயற்படுத்துவதற்கு ஊக்குவிக்க வேண்டும். அதனையே நான் வலியுறுத்தவுள்ளேன்’ என்று கூறியுள்ளார்.