கண்டி மாவட்டத்தின் திகண, தெல்தெனிய, அக்குரண உட்பட நாட்டின் பலபகுதிகளிலும் ஏற்பட்ட கலவர நிலையை அடுத்து நடைமுறைப்படுத்தப்பட்ட அவசரகாலச்சட்டம் நீக்கப்பட்டுள்ளது.
ஜப்பானிலிருந்து நேற்றிரவு நாடு திரும்பிய ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன, நாட்டில் நிலவும் அவசர கால நிலைமையை நீக்குவதற்கான வர்த்தமானியில் கையொப்பமிட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
கண்டியில் இடம்பெற்ற வன்முறைகளையடுத்து நாட்டின் தேசிய பாதுகாப்பு காரணமாக கடந்த 7ம் திகதி முதல் நாட்டில் அவசரகால சட்டம் அமுலாக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் குறித்த அவசரகால சட்டத்தை ரத்து செய்வதற்கான வர்த்தமானி அறிவிப்பில் ஜனாதிபதி நேற்று இரவு கையொப்பமிட்டுள்ளார்.
2009ம் ஆண்டில் யுத்தம் நிறைவிற்கு வந்தபின்னர் 2011ம் ஆண்டில் நீக்கப்பட்ட அவசரகாலச் சட்டம் கண்டி மாவட்டத்தின் திகண பிரதேசத்தில் முஸ்லிம்களை இலக்குவைத்து ஆரம்பிக்கப்பட்ட கலவரம் கட்டுமீறிப்போவதைத் தடுப்பதற்காகவே 7வருடங்களின் பின்னர் முதல்முறையாக நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது.