தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பு ஐக்கிய தேசிய முன்னணி அரசு அமைக்க ஆதரவு தெரிவித்துள்ளமைக்கு கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) ஒரு பகுதியினர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலர் என்.சிறிகாந்தா மற்றும் எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோரே எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இந்த விடயம் ஒருங்கிணைப்புக் குழுவில் தீர்மானிக்கப்படவில்லை என்றும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
கடந்த மாதம் 2ஆம் திகதி கொழும்பில் கூடிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழு, மகிந்த ராஜபக்ச அரசமைப்புக்கு விரோதமாகத் தலைமை அமைச்சராக நியமிக்கப்பட்டமை தொடர்பாக ஆராய்ந்தது. அவருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு ஆதரவு அளிப்பது தொடர்பாகவும் பேசப்பட்டது. ஆனால் ஐக்கிய தேசிய முன்னணிக்கு ஆதரவளிப்பது தொடர்பாகப் பேசவில்லை.
இந்த நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு, அரசு ஒன்று உருவாக முன்னரே அதற்கு ஆதரவளிக்கின்றோம் என்று கடிதம் மூலம் அறிவித்துள்ளமையானது கூட்டமைப்பின் தீர்மானங்களுக்கு விரோதமானது. மக்களது வேணவாக்களைப் பாதிக்கக் கூடியது என்று என்.சிறிகாந்தா மற்றும் எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோர் தனித்தனியே கருத்துத் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் உள்பட இரு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐக்கிய முன்னணி அரசு அமைந்தால் அதற்கு ஆதரவு வழங்க முடியும் என்று அரச தலைவருக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வழங்கியுள்ள கடிதத்தில் ஒப்பமிட்டுள்ளனர்.