நாடாளுமன்றம் கலைக்கப்படுகின்றது என்று வெளியிட்ட அரசிதழை மீளப் பெறுவது தொடர்பாக அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன தீவிரமாக ஆராய்ந்து வருகின்றார் என்று ரொய் டர்ஸ் செய்திச் சேவை தெரிவித்துள்ளது.
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான தீர்ப்புத் தமக்குப் பாதகமாக அமையக் கூடும் என்ற அச்சம் காரணமாகவே அரச தலைவர் இது தொடர்பாக ஆராய்ந்து வருகின்றார் என்றும் கூறப்படுகின்றது.
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை எதிர்வரும் 7ஆம் திகதி நடைபெறவுள்ளது. அதற்கு முன்னதாகப் பெரும்பாலும் 5ஆம் திகதி நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது என்று அறிவிக்கப்பட்ட அரசிதழ் அறிவிப்பை அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன மீளப் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
அன்றைய தினம் நாடாளுமன்றத்தில் புதிய தலைமை அமைச்சரை நியமிக்கக் கோரும் தீர்மானத்தை நிறைவேற்றுமாறு அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன, கூட்டமைப்பிடம் நேற்று முன்தினம் தெரிவித்துள்ளார். அந்தத் தீர்மானம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டால், அதற்கு அமைவாகச் செயற்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். இதனால், நாடாளுமன்றக் கலைப்பு அரசிதழ் அறிவிப்பை அவர் மீளப் பெறக் கூடும் என்று கூறப்படுகின்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற சந்திப்பிலும், நாடாளுமன்றக் கலைப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகள் தொடர்பில் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன வலிந்து பேச்சை ஆரம்பித்துள்ளார். அந்த வழக்குகள் மீளப் பெறப்பட வேண்டும் என்று சாரப்பட அவர் கருத்துரைத்துள்ளார்.
உயர் நீதிமன்றம் தனக்குப் பாதகமாகத் தீர்ப்பளித்தால் அதாவது அரசமைப்பை அரச தலைவரே மீறியதாகத் தீர்ப்பு வழங்கினால், அது பெரும் பாதிப்பு என்று கருதுவதால் அரசிதழ் அறிவிப்பை மீளப் பெறும் முயற்சியில் அவர் இறங்கியுள்ளதாகக் கூறப்படுகின்றது.