தமிழீழம் உருவாகிவிட்டது! பொலிஸ்மா அதிபரின் மௌனம் இதை உணர்த்துகின்றது? பெரிய சந்தேகம்
தெற்கில் இடம்பெறும் விடயங்கள் தொடர்பில் கடுமையான முறையில் நடந்துகொள்ளும் பொலிஸ்மா அதிபர் வடக்கில் இடம்பெறும் செயற்பாடுகளின்போது மெளனமாக இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே இவ்வாறு கூறினார். தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
பொலிஸ்மா அதிபருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை வடக்கில் பிரயோகிக்க முடியாத நிலையில் உள்ளார், சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் தெற்கில் ஒரு வகையாகவும், வடக்கில் வேறுவகையாகவும் செயற்படுவதாக குற்றம் சுமத்தனார்.
இதற்கு உதாரணமாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியமையை குறிப்பிடலாம், பொலிஸ்மா அதிபரின் உத்தரவுக்கு அமையவே சாதாரண பொலிஸார் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் சாதாரண பொலிஸை குற்றம் சொல்ல முடியாது எனவும் குறிப்பிட்டார்.
இதுவே வடக்கில் நடந்தால் பொலிஸ்மா அதிபர் மௌனமாகவே இருந்து விடுவார். சட்டத்தை அமுல்படுத்தும் விடயத்தில் பொலிஸ்மா அதிபர் முழுநாட்டிலும் ஒரே மாதிரியாக நடந்துகொள்ள வேண்டும் எனவும் உதய கம்மன்பில அறிவித்தார்.
பொலிஸ் திணைக்களம் கடந்த காலங்களில் பாதுகாப்பு அமைச்சின் கீழ் செயற்பட்டது. ஆனால் தற்போது சட்டம் ஒழுங்கு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.
எனவே நாட்டின் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொறுப்பு பொலிஸ்மா அதிபருக்கு உள்ளது. இருந்தபோதிலும் தற்போது நாட்டின் சட்டம் உரியமுறையில் அமுல்படுத்தப்படுவதில்லை எனவும் குற்றம் சுமத்தினார்.
இதிலிருந்து ஒரு முடிவுக்கு வரலாம், வடக்கில் இடம்பெறும் விடயங்கள் தொடர்பில் மெளனித்திருப்தை வைத்து நோக்கினால் வடக்கில் தமிழீழத்தை உருவாக்கும் பணி நிறைவுக்கு வந்துவிட்டது. அதனால்தான் பொலிஸ்மா அதிபரின் ஆளுகை அங்கு இல்லை என்ற பெரிய சந்தேகம் தமக்குள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்.