மத்துகம பிரதேசத்தில் உயிரிழந்த நபரொருவரின் சடலத்தை புதைக்க தடைவிதித்த தோட்ட நிர்வாகத்தை எதிர்த்து, சடலத்தை அடக்கம் செய்த விவகாரத்தில் பிரதியமைச்சர் பாலித தெவரப்பெரும நீதிமன்றில் முன்னிலையாகவுள்ளார்.
குறிப்பிட்ட மயானத்தில் சடலங்கள் புதைக்கக்கூடாதென தோட்ட முகாமையாளர் தெரிவித்த முறைப்பாட்டின் அடிப்படையில், தெபுவன பொலிஸாரால் மத்துகம நீதிமன்றத்தின் ஊடாக சடலங்களை புதைக்க தடைவிதிக்கப்பட்டிருந்தது.
அந்த தடையை மீறி, சடலத்தை புதைத்தமையினாலேயே அவரை இன்று (செவ்வாய்க்கிழமை) நீதிமன்றத்தில் முன்னிலையாகும்படி அழைக்கப்பட்டுள்ளார்.
அண்மையில் மத்துகம பிரதேசத்தில் உள்ள தோட்டமொன்றில், பல வருடங்களாக உழைத்த தமிழ் முதியவர் ஒருவரின் சடலத்தை தோட்டத்திலுள்ள மயானத்தில் அடங்கம் செய்ய, தோட்ட உரிமையாளர் அனுமதி வழங்க மறுத்திருந்தார்.
இந்நிலையில், இந்த விடயம் தொடர்பாக பிரதேச மக்கள் பிரதியமைச்சர் பாலித தெவரபெருமவிடம் முறையிட்டிருந்தனர்.
இதனையடுத்து அதிரடியாக செயற்பட்ட பாலித தெவரபெரும, தடையை மீறி சடலத்தை அடக்கம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.