தனி நபர்கள் வாங்கும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கும் மானியத்தை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. வளைகுடா நாடுகளின் ஆதிக்கத்தால் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து கொண்டே செல்கிறது. சென்னையில் தற்போது ஒரு லிட்டர் பெட்ரோல் ₹80 ஆக விற்பனையாகி வருகிறது. இதைவிட ஒரு சில ரூபாய் மட்டுமே டீசலுக்கு குறைவாக உள்ளது.
பெட்ரோல், டீசல் வாகனங்கள் வெளியிடும் புகையால், சுற்றுச்சூழலுக்கு பெரும் ஆபத்து நிலவுகிறது. இதனால், அவை வெளியிடும் புகை அளவு குறைவாக இருக்க வேண்டும் என்பதற்காக, பாரத் தரநிலை பின்பற்றப்பட்டு வருகிறது.
இது தற்போது பாரத்-5 நிலையை தாண்டியுள்ளது.பெட்ரோல், டீசல் எரிபொருள் விலை ஏறிக் கொண்டே போவதால், அது நாட்டின் அந்நியச் செலாவணி விஷயத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால்தான், ரூபாயின் மதிப்பும் சரிகிறது.
இதற்கு சரியான தீர்வு எலெக்ட்ரிக் வாகனங்களை பெருமளவில் இயக்க வைப்பது. இதன் மூலம், சுற்றுச்சூழல் பாதிப்பையும் குறைக்க முடியும்.
இதற்காகத்தான் மத்திய அரசு, எலெக்ட்ரிக் வாகன தயாரிப்புக்கு ஊக்கம் அளித்து வருகிறது.வரும் 2030ம் ஆண்டுக்குள் பெரும்பாலான வாகனங்களை எலெக்ட்ரிக் வானகங்களாக மாற்றிவிட வேண்டும் என்று மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் அறிவுறுத்தி, அதற்கான திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது.
இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குபவர்களை ஊக்குவிக்கும் நடவடிக்கையையும் மத்திய அரசு எடுத்து வருகிறது.
இதற்காக ‘பேம்’ திட்டம் (இந்தியாவில் அதிவிரைவாக ஹைபிரிட் மற்றும் எலெக்ட்ரிக் வாகனங்களை ஏற்றுக்கொள்ளும் திட்டம்) செயல்படுத்தப்படுகிறது.முதல்கட்டமாக, இத்திட்டத்திற்கு, ₹700 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்த நிதியில் இருந்து எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மானியம் வழங்கப்பட்டு வந்தது. ஆனால், எலெக்ட்ரிக் வாகனங்களின் செயல்பாடு அதிவிரைவாக இல்லாததாலும், சார்ஜிங் பாயின்ட்கள் மற்றும் பேட்டரிகளின் செயல்திறன் குறைவு ஆகியவற்றினால், அவை தனிநபர்களிடம் பெரிய அளவில் வெற்றி பெறவில்ைல என்றே கூறவேண்டும்.
ஆனால், தற்போது பல்வேறு நிறுவனங்களின் தீவிர ஆராய்ச்சியினால் இதற்கு விடிவுக்காலம் பிறக்க ஆரம்பித்துள்ளது. நீண்ட நாள் செயல்திறன் கொண்ட பேட்டரிகளுக்கான தொழில்நுட்பத்தை தனியாருக்கு வழங்க இஸ்ரோ நிறுவனமும் முன்வந்துள்ளது.
இதனால் பேட்டரி வாகனங்கள் மீது மக்களின் கவனம் பதிய ஆரம்பித்துள்ளது.இந்த நேரத்தில், மத்திய அரசு வேறு விதமாக யோசிக்க ஆரம்பித்தது.
அதாவது தனிநபர்கள் எலெக்ட்ரிக் வாகனங்களை அதிகம் பயன்படுத்தாத நிலையில், தனியார் டாக்சி நிறுவனங்கள் போன்ற அதிகளவில் வாகனங்களை பயன்படுத்தும் நிறுவனங்கள், இந்த வாகனங்களை பயன்படுத்த முன்வந்தால், அவர்களுக்கு மானியத்தை அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்ததாக தெரிய வந்தது.
இதற்காக பேம்-2ம் கட்ட திட்டத்தில் அறிவிப்பு வெளியாகலாம் என்று கூறப்பட்டது. இதனால், தனிநபர்கள் எலெக்ட்ரிக் வாகனங்கள் வாங்கினாலும், அவர்களுக்கு மானியம் கிடைக்காமல் போகும் சூழ்நிலை ஏற்பட்டது. இதற்கு பொதுமக்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.இந்நிலையில், 2ம் கட்ட பேம் திட்டத்திற்கு ₹5,500 கோடியை ஒதுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், ஏற்கனவே இருந்த நடைமுறையின்படியே மானியத்தை தொடருவது என்றும் மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதனால், எலெக்ட்ரிக் கார்களை வாங்கும்போது, ₹1.4 லட்சம் வரையில் மானியம் கிடைக்கும். இது தனிநபர்களுக்கும் கிடைக்கும் என்பதால், குறைவான விலையில் இந்த கார்களை வாங்கி மகிழ முடியும்.
விரைவில் அதிநவீன எலெக்ட்ரிக் கார்களை வெளியிட டாடா, மகேந்திரா, பஜாஜ் உள்ளிட்ட நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. இது இந்த கார்களை வாங்க நினைப்பவர்களுக்கு வரப்பிரசாதமாக அமையும். இதற்கான இறுதி முடிவை மத்திய அமைச்சரவை விரைவில் எடுக்கும் என்று சாலை போக்குவரத்து துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
எப்படி கணக்கிடப்படுகிறது மானியம்?எலெக்ட்ரிக் வாகனங்களில் பேட்டரி செயல்திறனை வைத்தே மானியத் தொகை கணக்கிடக்கப்படுகிறது.
ஒவ்வொரு கிலோவாட் ஹவருக்கும், ரூ.10 ஆயிரம் மானியம் கிடைக்கும். எலெக்ட்ரிக் கார்கள் 14 கிலோவாட் ஹவர் பேட்டரிகள் வரை இருக்கின்றன. இதன்படி பார்க்கும்போது, கார்களுக்கு ரூ.1.40 லட்சம் வரை மானியம் கிடைக்கும். டூவீலர்களில் 2 கிலோவாட் ஹவர் பேட்டரி இருப்பதால், அதற்கு ரூ.20 ஆயிரம் மானியம் கிடைக்கும்.
மூன்று சக்கர வாகனங்கள், அதாவது ஆட்டோக்களில் 4 முதல் 5 கிலோவாட் ஹவர் பேட்டரிகள் இருப்பதால், அதற்கு ₹40 ஆயிரம் முதல் ரூ.50 வரை மானியம் கிடைக்கும்.