ஈரான் இராணுவப் படைத் தளபதி சுலைமானி கொலையால் மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றமான சூழல் நீலவுவதாகவும், இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் ஆகிய நாடுகளுக்கு அமெரிக்க மக்கள் செல்ல வேண்டாம் எனவும் அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஈராக்கில் கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்க இராணுவம் நடத்திய விமான தாக்குதலில் ஈரான் இராணுவ தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டார். இதனால் அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளிடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து அமெரிக்க அரசு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதனைக் கூறியுள்ளதாக சர்வதேச செய்திகள் சுட்டிக்காட்டியுள்ளன.
மத்திய கிழக்கு நாடுகளில் நீடிக்கும் உச்சநிலை பதற்றத்தால் அங்குள்ள அமெரிக்க மக்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் நிலவுகிறது. எனவே, அமெரிக்க மக்கள் இஸ்ரேல், பாலஸ்தீனம் நாடுகளுக்கு பயணம் செய்வதில் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும். குறிப்பாக ஜெருசலேம், மேற்குகரை மற்றும் காசா ஆகிய பகுதிகளுக்கு செல்வதை அமெரிக்க மக்கள் முற்றிலும் தவிர்க்க வேண்டும்” எனவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.