தோனிக்கு, ‘சென்னை இரண்டாவது தாய் வீடு’ போன்றது. தன் மீது விஸ்வாசமாக உள்ள சென்னை ரசிகர்களுக்காக இம்முறை கோப்பை வென்று தர வேண்டுமென உறுதியாக எண்ணினார். இதற்காக கைதேர்ந்த சிற்பியை போல அணியை செதுக்கினார். வீரர்கள் தேர்வு முதல் போட்டியில் வியூகம் வரை அனைத்தையும் கச்சிதமாக செய்தார். இவருக்கு சக வீரர்களும் ஒத்துழைப்பு தந்தனர். பைனலில் வாட்சன் சதம் விளாச, சென்னைக்கு கோப்பை வசமானது.
ஐ.பி.எல்., தொடரின் வெற்றிகரமான அணி சென்னை. 2013ல் வெடித்த சூதாட்ட புயல் சென்னை, ராஜஸ்தான் அணிகளை சாய்த்தது. இரு ஆண்டு (2016, 2017) தடை, முடிந்து இம்முறை மீண்டும் களம் கண்டது சென்னை. ‘சரியான திட்டமிடலுடன் ஆயுதங்களின் கூர்மையும் இருந்தால் போர்க்களத்தில் எளிதாக வெல்லலாம்,’ என முடிவு செய்தார் கேப்டன் தோனி. ஏலத்தில் எடுக்கப்பட்ட சென்னை வீரர்களின் சராசரி வயது 33.
தமிழகத்தின் ‘நம்பர்–1’ பவுலரான அஷ்வினை வாங்காதது சர்ச்சை ஏற்படுத்தியது. ‘வயதான அணி’ என சமூக வலைத்தளங்களில் வறுத்தெடுத்தனர். ஏலம் முடிந்து பயிற்சிகள் துவங்கின. வீரர்களிடம் உணர்ச்சி வசப்பட்டு பேசிய தோனி முதன் முறையாக கண் கலங்கினார்.