6 ஆண்டுகளுக்கு பிறகு, இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி நடத்த இந்திய அரசிடம் அனுமதி கேட்டு பி. சி. சி. ஐ கடிதம் எழுதியுள்ளது. பாகிஸ்தான் அணியுடனான கிரிக்கெட் தொடர்களை நடத்துவது குறித்து இந்திய அரசின் நிலைப்பாடு என்ன என்பதை விளக்க கோரி பி. சி. சி. ஐ. , இந்திய அரசிற்கு கடிதம் எழுதியுள்ளது. இந்திய அரசுக்கு பிசிசிஐ எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: பாகிஸ்தான் கிரிக்கெட் அணியுடனான உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் நடைபெறும் தொடர்களில் இந்திய அணி பங்கேற்பது தொடர்பாக மத்திய அரசு தன் நிலைப்பாடு குறித்து விரிவாகத் தெரிவித்தால் அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள பிசிசிஐக்கு வசதியாக இருக்கும்.
2012க்குப் பிறகு எந்தவித டெஸ்ட் போட்டிகளும் இரு நாடுகளுக்குமிடையே நடத்தப்படவில்லை. தற்போது இரு நாடுகளும் சுமுகமாக இருக்கும் நிலையில் இந்தப் போட்டியினை நடத்திக் கொள்வது குறித்து இந்திய அரசின் நிலைப்பாடு என்ன என்பதை தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு அந்தக் கடிதத்தில் கூறி இருக்கிறார்கள். இது குறித்து பிசிசிஐ நிர்வாகம் தரப்பில் கூறுகையில், இது பிசிசிஐ மேற்கொள்ளும் வழக்கமான செயல்பாடுதான்.அரசிடமிருந்து அனுமதி பெற வேண்டியது எங்கள் கடமை என்பதால் இந்தக் கடிதம் எழுதபட்டுள்ளது.
அதே சமயம் அரசின் அனுமதி கிடைக்கும் வரை இந்தியா-பாகிஸ்தான் இடையே எந்த போட்டியும் நடைபெறாது என்பதால் இந்த கடிதம் எழுதி பதிலுக்கு காத்திருக்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டது.