வடக்கு மாகாண சபையின் இன்றைய அமைச் சரவைக் கூட்டத்துக்கு ப.சத்தியலிங்கத்துக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை. புதிய சுகா தார அமைச்சர் பதவியேற்கவும் இல்லை, ப.சத்தியலிங்கத்தின் பதவி விலகல் கடிதம் ஆளு நருக்கு கொடுக்கப்படவுமில்லை.
இதேவேளை, அமைச்சர் பா.டெனீஸ்வரனை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தனது அமைச்சரவையிலிருந்து நேற்றைய தினம் நீக்குவதாக ஆளுநருக்கு அறிவித்துள்ளபோதும், டெனீஸ்வரனுக்கு இன்றைய அமைச்சரவைக் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்பேன் என்று அமைச்சர் டெனீஸ்வரனும் தெரிவித்தார்.
வடக்கு மாகாண சபையின் அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. சுகாதார அமைச்சராக இருந்த ப.சத்தியலிங்கம் தனது பதவி விலகலைச் சமர்பித்திருந்தபோதும், ஆளுநருக்கு அறிவிக்கப்படாமையால் சட்டரீதியான சுகாதார அமைச்சராக ப.சத்தியலிங்கமே தொடர்கின்றார்.
இந்த நிலையில் இன்று நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்துக்கு அவருக்கு அழைப்பு அனுப்புவதா? இல்லையா? என்பது தொடர்பில் குழப்பம் நிலவிவந்தது. முதலமைச்சர் அலுவலகத்தின் அறிவுறுத்தலுக்கு அமைவாக ப.சத்தியலிங்கத்துக்கு அமைச்சரவைக் கூட்டதுக்கான அழைப்பு அனுப்பப்படவில்லை.
அவருக்குப் பதிலாக புதிய சுகாதார அமைச்சர் நியமிக்கப்படவில்லை. முதலமைச்சரும் அந்த அமைச்சைப் பொறுப்பேற்கவில்லை. இதற்கிடையில் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், சுகாதார அமைச்சராக ஜி.குணசீலனின் பெயரை ஆளுநருக்குப் பரிந்துரைத்தபோதும் அவர் இன்னமும் பதவியேற்கவில்லை. ஆளுநர் இன்று மாலையே யாழ்ப்பாணத்துக்கு வருவார்.
ஆனால் அமைச்சரவைக் கூட்டம் காலையில் நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சர் இன்றியே இன்றைய அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்படுகின்றது.