கைது செய்யப்பட்டு பின்னர் காணாமல் ஆக்கப்பட்டமைக்கு இலங்கை நீதிப் பொறிமுறை ஊடாக 27 ஆண்டுகள் கடந்தும் எந்த நீதியும் கிடைக்க வில்லை. நாம் பன்னாட்டு நீதிப்பொறி முறையே அவசியம் என்று வேண்டுகின்றோம்.
மட்டக்களப்பு சித்தாண்டி முருகன் ஆலய முன்றலில் கைதின்பின்னர் காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்ப உறவுகள் மேற்படி கோரிக்கையை முன்வைத்துள்ளன.
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி பொதுச் செயலரும் கிழக்கு மாகாண விவசாய அமைச்சருமான கி.துரைராஜசிங்கத்துக்கு நேற்று அனுப்பி வைக்கப்பட்டுள்ள மனுவிலே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
மட்டக்களப்பு மாவட்டத்தின் சித்தாண்டி மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் 1990ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதக் காலப் பகுதிகளில் இடம்பெற்ற கொடூரமான போர், இராணுவத்தின் அடக்கு முறைகள், தொடர்ச்சியான சுற்றிவளைப்புக்கள் நடந்து கொண்டிருந்த வேளையில் ஆயிரக்கணக்கான பொது மக்கள் பயந்து, ஒளிந்து பாதுகாப்பற்ற சூழலில் இருந்தனர்.
பன்னாட்டுச் செஞ்சிலுவைச் சங்கம், சித்தாண்டி சிறி சித்தி வேலாயுத சுவாமி ஆலயத்தை நலன்புரி முகாமாக அறிவித்து அங்கு அடைக்கலம் அடையச் செய்தது.
இலங்கை இராணுவத்தினர் முகாமில் அடைக்கலம் தேடிவந்திருந்த இளைஞர்கள், மாணவர்கள், வறுமையான கூலித் தொழிலாளர்களையும் மூன்று சுற்றிவளைப்பு நடவடிக்கையின் மூலம் 62 பேரைக் கைது செய்து வாகனங்களில் ஏற்றிச் சென்றனர்.
கைது செய்யப்பட்ட அனைவரும் மட்டக்களப்பு மாவட்டத்தில் முறக்கொட் டான்சேனை இராணுவ முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டனர். 27 ஆண்டுகளாக அதன் பின்னர் என்னவென்று தெரியாத நிலமையிலேயே உள்ளது.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள், தமது உயிர் வாழும் உரிமை உட்பட அனைத்து உரிமைகளையும் இழந்துள்ளனர். எங்கே என்ன நிலையில் இருக்கிறார்கள்? இருக்கிறார்களா, இல்லையா என்பதை அறிய நாம் துடித்துக் கொண்டிருக்கின்றோம்.
காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்ப உறவுகளாகிய நாம் அச்சுறுத்தப்படுவதானது உண்மையைக் கண்டறிவதற்கும் நீதியை நிலைநாட்டுவதற்கும் எதிராக மேற்கொள்ளப்படும் நடவடிக்கையாகும். இது சாட்சிகளுக்குப் பாதுகாப்பு கிடையாது என்பதையும் உறுதிப்படுத்துகிறது. நிலைமாறுகால நீதியின் நியாயாதிக்கத்தைக் கேள்விக்குள்ளாக்குகிறது.
இலங்கை அரசு அரசியல் இயலாமையிலும் நல்லிணக்கம் சார்ந்து நேர்மையான எண்ணப்பாடு இல்லாமலும் இருப்பதாகவே காண்கிறோம். வடக்கு – கிழக்கு மக்களுக்கு நீதியை வழங்கவோ சமாதானமான வாழ்வை உருவாக்கவோ இயலாத நிலையிலேயே இலங்கை அரசுள்ளது.
எமது பிரதேசத்தில கைதின்பின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமைக்கு இலங்கை நீதிப் பொறி முறை ஊடாக 27 வருடங்கள் கடந்தும் எந்த நீதியும் கிடைக்கப் பெறாத நிலையில் நாம் பன்னாட்டு நீதிப்பொறிமுறையே அவசியம் என்று வேண்டுகின்றோம்.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட குடும்ப உறவுகளுக்கும் ஏனைய சாட்சிகளுக்கும் இந்த விடயம் சார்ந்து செயற்படும் மனித உரிமைப் பாதுகாவலர்களுக்கும் உரிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
நிலைமாறுகால நீதி முன்னெடுப்புகள் நேர்மையான முறையில் முன்னெடுக்கப்பட அரச வன்முறைப் பொறிமுறைகள் கட்டுப்படுத்தப்பட வேண்டும்.
இவையாவையும் முறையே நடைபெறவும் உண்மையான நல்லிணக்கம் ஏற்படவும் வேண்டுமாயின் ஐ.நா. இலங்கை நிலைமாறுகால நீதி முன்னெடுப் புகளில் இணைப் பங்காளியாக வேண்டும் – என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள் ளது.