சீனாவிடம் இருந்து தனக்கு இரு முறை அழைப்பு வந்ததாகவும், மிக விரைவில் அந்நாட்டுடன் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட ஏழு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் 45ஆவது ஜி7 மாநாடு பிரான்சின் பியாரிட்ஸ் நகரில் நடைபெற்று வருகிறது.
இதில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அங்கு சென்றுள்ளார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், சீன அதிகாரிகள் தனக்கு இரு முறை அழைப்பு விடுத்ததாகவும், அவை மிக மிக நல்ல அழைப்புகள் என்றும் தெரிவித்தார்.
அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்து கொள்ள அவர்கள் விரும்புவதாகவும் குறிப்பிட்ட டிரம்ப், பேச்சுவார்த்தையைத் தொடங்கலாம் என்று
அழைத்ததாகவும், எனவே மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற இருப்பதாகவும் கூறினார். தங்களை சீனா மிகவும் புண்படுத்தியதாகக் கூறிய டிரம்ப், ஆனால் ஒப்பந்தப் பேச்சுவார்த்தையைத் தொடங்குவது தான் சரியான செயல் என்பதை சீனா புரிந்து கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
இருபெரும் பொருளாதார நாடுகளான சீனாவும், அமெரிக்காவும் வர்த்தக போரில் ஈடுபட்டு வந்த நிலையில், பேச்சுவார்த்தையை தொடங்கவிருப்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.