இந்த நாட்டில் சிறுபான்மையினருக்கு கொடுக்கப்பட்டுள்ள உரிமைகளையாவது பெரும்பான்மை சிங்களவர்களுக்கு வழங்குங்கள் என்று தான் கோரிக்கை விடுக்க வேண்டியுள்ளது என எல்லே குணவங்ச தேரர் தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று (16) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் தேரர் இதனைக் கூறினார்.
தமிழ் மக்கள் வடக்கு கிழக்கு எமது தாயகம் எனக் கூறுகின்றனர். அவர்கள் முழு நாட்டையும் எம்முடையது என்று சொல்லட்டும். அதற்கு நாம் எதிர்ப்பு இல்லை.
13 ஆம் திருத்தச் சட்டத்தை பலப்படுத்தும் நடவடிக்கைக்கு நாம் ஒரு போதும் இடமளிக்கப் போவதில்லை. நாம் இந்த ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தை தோற்கடிக்க வேண்டும்.
இந்த அரசாங்கத்தை தோற்கடிக்கவே வேண்டும். இந்த அரசாங்கம் எமக்கு புதுமையான ஒரு நோவினையைக் கொடுத்தது. பெரஹராவில் செல்லும் யானைக்குப் பிரச்சினை ஏற்படுத்தினர். அரசியலமைப்பொன்றை அமைத்துள்ளனர். இனவதா, மதவாத சட்டத்தை முதலில் கொண்டுவந்தனர். பின்னர் பிக்குகள் தொடர்பான சட்ட மூலத்தை கொண்டுவந்தனர். விகாரையிலுள்ள பிக்குகளை அகௌரவப்படுத்த ஆரம்பித்தனர். அஸ்கிரிய மகாநாயக்கரை, பெல்லன்வில தேரரை விமர்சிக்கின்றனர்.
இப்படியானவர்கள்தான் இறுதித் தருவாயில் தேரர்களை காப்புறுதி செய்வதற்கு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளனர். நாம் அவர்களுக்கு கூறுகின்றோம், எம்மை பாதுகாக்க இந்த நாட்டில் பௌத்த சிங்களவர்கள் உள்ளனர். நீங்கள் இந்த நாட்டிலுள்ள பௌத்தர்களின் புராதன சின்னங்களையும், அவர்களது புனித பிரதேசங்களையும் முடியுமானால் பாதுகாருங்கள் எனவும் தேரர் மேலும் கூறினார்.