நாட்டில் காணப்படும் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் விடத்தில் வெளிநாட்டு புலனாய்வு சேவைகளுக்கு இடமளிக்க வேண்டாம் என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கோரியுள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர இலங்கை பாதுகாப்பு தரப்பினருக்கும் முடியும் என்பதை அவர் தற்போது செயலில் நிரூபித்து காட்டி வருகின்றனர். இப்படியான நிலைமையில், வெளிநாட்டு புலனாய்வு சேவைகள் நாட்டுக்குள் வருவது பிரச்சினையை மேலும் சிக்கலாக்கும். இது மிகப் பெரிய அரசியல் தவறாக அமைந்துவிடும். ஐ.எஸ். பயங்கரவாதிகளை சர்வதேச மட்டத்தில் போஷித்து விட்டு, தமது நாட்டில் வெளிநாட்டு கொள்கைகளை செயற்படுத்தும் உபகரணமாக பயன்படுத்தும், புலனாய்சு சேவைகளிடம் இந்த பிரச்சினைகை்கு தீர்வுகாணும் விடயத்தை ஒப்படைப்பது, திருடனின் தாயிடம் சாத்திரம் கேட்பது போன்ற செயல். இதனால், வெளிநாட்டு புலனாய்வு சேவைகளின் அதிகாரிகள் இலங்கைக்கு செயற்பட இடமளிக்க வேண்டாம் என ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுப்பதாகவும் வீரவங்ச தனது கடிதத்தில் கூறியுள்ளார். அத்துடன் இலங்கையின் புலனாய்வு சேவை அதிகாரிகள் தலைமையிலான பாதுகாப்பு படையினரை சுதந்திரமாக தமது கடமை செய்யக் கூடிய நிலைமையை உருவாக்குவது முப்படை தளபதியான ஜனாதிபதியின் முக்கியமான பொறுப்பு எனவும் வீரவங்ச குறிப்பிட்டுள்ளார்.