தமிழ் சினிமாவில் அடிக்கடி ஏதாவது சர்ச்சைகள் வந்து போய்க் கொண்டேயிருக்கும். சமீபத்திய சர்ச்சை ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் காட்டப்பட்டுள்ள பாதிக்கப்பட்ட பெண்கள். அரசியல் பலம் கொண்ட ஒருவரும், அவரது நண்பர்களும் ஷ்ரத்தா, அபிராமி, ஆன்ட்ரியா ஆகியோரை உடல் ரீதியாக துன்புறுத்தியதால் வந்த பிரச்சினைதான் படத்தின் கதையாக இருந்தது. பெண்கள் ‘நோ’ என்று சொன்னால் அவர்களை தொந்தரவு செய்வது குற்றம் என்ற கருத்துதான் அந்தப் படத்தில் இடம் பெற்றிருந்தது. அந்தப் படத்திற்கு வெளியான சில யூ டியூப் விமர்சனங்களை சின்மயி கடுமையாக எதிர்த்திருந்தார்.
இந்நிலையில் சின்மயி கணவர் ராகுல் ரவீந்திரன் இயக்கத்தில் இன்று(ஆக.,9) வெளிவந்துள்ள ‘மன்மதடு 2’ படத்தில் ரகுல் ப்ரீத் சிங் மற்றும் ஜான்சி ஆகியோர் உதட்டோடு உதடு முத்தமிட்டுக் கொள்ளும் காட்சி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இதுதான் நமது கலாச்சாராமா, இதுதான் பெண்ணுரிமையா எனக் கேட்டு சின்மயிக்கு தெலுங்கு ரசிகர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
அந்தக் காட்சி படத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளது. ஆனால், அமெரிக்காவில் அப்படியே திரையிடப்பட்டுள்ளது. அந்தக் காட்சிதான் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. சின்மயிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ரசிகர்கள் சமந்தாவிடமும் ‘டீப்லி டிஸ்டர்பிங்’, #deeplydisturbing எனக் குறிப்பிட்டு அவர்களது எதிர்ப்பைக் காட்டி வருகிறார்கள். சமீபத்தில் ‘கபீர் சிங்’ இயக்குனர் சந்தீப் வங்கா கொடுத்த ஒரு பேட்டியைப் பற்றி ‘டீப்லி டிஸ்டர்பிங்’ என சமந்தா விமர்சித்திருந்தார்.
இந்த ‘டீப்லி டிஸ்டர்பிங்’ ஹேஷ்டேக்கை டுவிட்டரில் தெலுங்கு ரசிகர்கள் டிரென்டாக்கி வருகிறார்கள். அந்தக் காட்சி பற்றி இதுவரை சமந்தா, சின்மயி எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.