கைது செய்யப்பட்டுள்ள பளை சட்ட மருத்துவ அதிகாரி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபய ராஜபக்ஷவையும் கொலை செய்வதற்கு திட்டமிட்டதாக கூறப்படும் செய்தி பொய்யானது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
இவ்வாறு திட்டம் தீட்டியதாக பளை சட்ட மருத்துவ அதிகாரி உள்ளிட்ட சந்தேக நபர்கள் குழு வாக்குமூலம் அளித்ததாக தெரிவிக்கப்படும் செய்தி பொய்யானது எனவும் அவர் குறிப்பிட்டார்.
அவ்வாறான எந்த ஒரு தகவலையும் சந்தேக நபர்கள் எவரும் பொலிஸிடமோ வேறு அதிகாரிகளிடமோ தெரிவிக்கவில்லை எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.
நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனை அறிவித்தார்.
இதுவரை 7 சந்தேக நபர்கள் கைதாகியுள்ளதோடு பெருமளவு வெடிபொருட்களும் மீட்கப்பட்டுள்ளன. தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகிறன. கடந்த 18 ஆம் திகதி பளை வைத்தியசாலை சட்டமருத்துவ அதிகாரி சின்னையா சிவரூபன்,பயங்கரவாத செயற்பாடுகள் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார்.
பிரதான சந்தேக நபரான சிவரூபனை விசாரணை செய்ததில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் ஆயுதங்கள், வெடிபொருட்கள் மற்றும் கைக்குண்டுகள் என்பன கைப்பற்றப்பட்டன. இது தவிர நிமலராஜ் மற்றும் ரூபன் ஜதுசன் ஆகிய இரு சந்தேக நபர்கள் கடந்த 28 ஆம் திகதி கைது செய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.