ஐக்கிய தேசிய கட்சி பிளவுப்பட்டு சஜித் பிரேமதாஸவை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்காது என அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
மாத்தறை – சனத் ஜயசூரிய மைதானத்தில் நேற்று இடம்பெற்ற மக்கள் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘குடும்ப சர்வாதிகார ஆட்சிக்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது. ஐக்கிய தேசிய கட்சி பிளவுப்பட்டு அமைச்சர் சஜித் பிரேமதாஸவை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்காது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் ஆசிர்வாதம் முழுமையாக கிடைக்கப் பெறும். சர்வாதிகார குடும்ப ஆட்சியை மீள தோற்றுவிக்க முடியாத அளவிற்கு மஹிந்த ராஜபக்ஷவிற்கு படுதோல்வியினை பெற்றுக் கொடுப்போம்.
1984 காலக்கட்டத்தில் இருந்து ஜனாதிபதி தேர்தலுக்கான தேர்தல் பிரச்சாரங்கள் மாத்தறை நகரில் இடம் பெற்றது. முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டார நாயக்கா குமாரதுங்க தொடக்கம் நடப்பு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வெற்றிக்கும் மாத்தறை நகரில் தேர்தல் பிரச்சாரம் இடம் பெற்றது. ஆனால் இந்த மக்கள் சந்திப்பு பாரிய மக்கள் தொகையினை கொண்டதாக காணப்படுகின்றது.
நான்கு வருட ஆட்சி காலத்தில் அரசாங்கம் என்ன செய்தது என்று கேள்வி எழுப்பி எதிரணியினர் தேர்தல் பிரச்சாரங்களை முன்னெடுக்கின்றார்கள். ஜனநாயகம், தேசிய நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்தி இவை மூன்றையும் முன்னிலைப்படுத்தி அரசாங்கம் அரச நிர்வாகத்தை முன்னெடுத்து சென்றது.
பல நெருக்கடிகளுக்கு மத்தியிலே அரசாங்கம் தேசிய பொருளாதாரத்தை தொடர்ந்து முறையாக கொண்டு சென்றது’ என குறிப்பிட்டுள்ளார்.