ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு இடையிலான கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இந்தப் பேச்சுவார்த்தை இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணியளவில் இடம்பெறவுள்ளது.
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் குழுவில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளர் மஹிந்த அமரவீர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் லசந்த அழகியவன்ன ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.
முன்னர் நடத்தப்பட்ட பேச்சுக்களில் இழுபறி நிலை காணப்பட்டதையடுத்து, பொதுஜன பெரமுனவின் சார்பில் பசில் ராஜபக்ஷ தலைமையில் பேச்சுவார்த்தையை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த குழுவில் டலஸ் அழகப்பெரும மற்றும் பேராசிரியர்ஜி.எல்.பீரிஸ் ஆகியோர் அடங்குகின்றனர்.
இன்றைய கலந்துரையாடலில் இணக்கப்பாடு எட்டப்பட்டால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவும் சந்தித்து, கூட்டணியை அமைப்பதற்கான இறுதி நிபந்தனைகள், இணக்கப்பாடுகளை எட்டுவார்கள் என சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
கூட்டணியின் பெயர் மற்றும் சின்னம் குறித்து இன்றைய கலந்துரையாடலில் முக்கிய கவனம் செலுத்தப்படும் என்றும் எனினும் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவை ஆதரிப்பது தொடர்பாக கட்சி இன்னமும் முடிவெடுக்கவில்லை என்றும் அவர் கூறினார்.
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு இடையிலான கூட்டணி தொடர்பாக பல கட்டங்களாக பேச்சுவார்த்தை நடைபெற்ற போதிலும் இதுவரையில் எந்தவிதமான தீர்க்கமான முடிவும் எட்டப்படவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.