இலங்கை படையினர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்கப்பட வேண்டும் என்று அவுஸ்ரேலியா வலியுறுத்தியுள்ளது.
கொழும்பு துறைமுகத்தில் வைத்து நேற்று ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவுஸ்ரேலிய பதில் தூதுவர் ஜோன் பிலிப் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர், “உள்நாட்டுப் போரின் போது மோசமான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கும் இலங்கை படையினருடன் இணைந்து செயற்படுவதற்கு அவுஸ்ரேலிய ஆயுதப்படைகளுக்கு எந்த தயக்கமும் இல்லை.
நாங்கள் இலங்கை ஆயுதப்படைகளுடன் இணைந்து செயற்பட விரும்புகிறோம். போர் முடிந்து 10 ஆண்டுகளாகி விட்டன. நாங்கள் எதிர்காலத்தைப் பற்றியே சிந்திக்க வேண்டியுள்ளது.
மோசமான குற்றச்சாட்டுகள் உள்ளன என்பதை நாங்கள் அறிவோம். அவர்கள் அதனை தீவிரமாக எடுத்துக்கொள்வார்கள் என்று நிச்சயமாக நாங்கள் நம்புகிறோம்.
குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் கடப்பாட்டை வலியுறுத்தும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவை தீர்மானத்துக்கு இலங்கை இணை அனுசரணை வழங்கியுள்ளதன் மூலம் அவுஸ்ரேலியாவுக்கு நம்பிக்கை தருகிறது” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

