2015ஆம் ஆண்டுக்கு பின்னரான காலப்பகுதியில் மனித உரிமைகள் விவகாரங்களில் இலங்கை முன்னேற்றம் அடைந்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
கொழும்பில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘மஹிந்த ராஜபக்ஷ, பான் கீ முனுடன் செய்துக்கொண்ட ஒப்பந்தங்களை செயற்படுத்தாமையே நாம் மனித உரிமைகள் ஆணைகுழுவில் விசாரணைகளை எதிர்கொள்ள காரணமாக அமைந்தது.
அதேபோல் 13 ஆவது திருத்தச்சட்டத்தை அமுல்படுத்துவதாக அவர் ஒப்பந்தம் செய்துக் கொண்டார். அதேபோல் 2013ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிராக பொருளாதார தடைகள் விதிக்கப்படலாம் என அன்றை அரசாங்கம் கூறியது.
இவ்வாறான வெளிநாட்டு கொள்கைகளே அன்று காணப்பட்டன. இன்று மஹிந்த மின்சார நாட்காலிக்கு தம்மை கொண்டு செல்ல போகின்றனர் என கூறுவதில்லை. தற்போது மேலதிகமாக 2 வருட கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இது அரசாங்கம் பெற்ற வெற்றி.
இன்று காணாமல் போனோர் அலுவலகம் திறக்கப்பட்டமை, காணிகள் விடுவிப்பு உள்ளிட்ட விடயங்களை ஆணையாளர் பாராட்டியுள்ளார். ஆகவே இலங்கை, 2015ஆம் ஆண்டுக்கு பின்னரான காலப்பகுதியில் மனித உரிமைகள் விவகாரங்களில் முன்னேற்றம் அடைந்துள்ளதை அவர் ஏற்றுக்கொண்டுள்ளார்.
அரசாங்கம் அவற்றுக்காக செயற்பட்டு வருகின்றது என்பதையும் அவர் ஒப்புக் கொண்டுள்ளார். இவ்வாறான பிரச்சினைகளை சர்வதேசத்திற்கு கொண்டு செல்ல அனுமதித்து விட்டு தற்போது இவர்கள் அவற்றுக்கு எதிராக பேசுகின்றனர்.
இராணுவத்தினர் குற்றம் இழைத்ததை நாம் ஏற்றுக்கொள்ள மறுத்ததால் இன்று அவர்களுக்கு மாலியில் சேவையாற்ற முடிந்துள்ளது. மொத்தத்தில் அன்று சர்வதேசத்திடம் இழந்தவற்றில் பலதை இன்று மீள பெறமுடிந்துள்ளது’ என தெரிவித்துள்ளார்.

