குடிவரவு அதிகாரிகளின் அசட்டைத்தனம் காரணமாக பிரித்தானியர் ஒருவர் அவுஸ்ரேலியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரித்தானியாவை சேர்ந்த எட்மண்ட் ரீட் (28) என்ற இளைஞர் கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதம், சிட்னியில் உள்ள ஒரு நிறுவனத்தில் $103,000 சம்பளத்தில் சீனியர் மென்பொருள் பொறியாளராக பணியமர்த்தப்பட்டார்.
எட்மண்ட் வேலை செய்யும் திறமை மிகவும் பிடித்து போகவே, அவருடைய முதலாளி அதே ஆண்டு ஆகஸ்ட் 9-ம் திகதி 457 விசாவிற்கு விண்ணப்பித்துள்ளார்.
ஒரு வருட காலமாகியும் அதிகாரிகள் அவரை தொடர்பு கொள்ளாமல் இருந்துள்ளனர். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 22ம் திகதி அவரை தொடர்பு கொண்ட அதிகாரிகள், 12 மாதங்கள் காலாவதியாகிவிட்டதால், அவரது முதலாளி விண்ணப்பித்திருந்தது செல்லுபடியாகாது என தெரிவித்துள்ளனர்.
மேலும் 28 நாளைக்குள் பதில் கொடுமாறும் மின்னஞ்சல் அனுப்பியுள்ளனர். அன்றைய தினமே ரீட் பதில் மின்னஞ்சல் கொடுத்துள்ளார்.
ஆனால் அதிகாரிகளிடம் இருந்து எந்தவித பதிலும் வரவில்லை. அதற்கு மாறாக நவம்பர் 21ம் திகதி மீண்டும் அதிகாரிகளிடம் இருந்து ஒரு மின்னஞ்சல் வந்துள்ளது.
அவருடைய மேல்முறையீடு விசாவிற்கு மறுப்பு தெரிவித்து, இன்னும் 35 நாட்களுக்குள் நாட்டை விட்டு வெளியேறுமாறு அதில் குறிப்பிட்டிருந்துள்ளது.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த ரீட் பெரும் ஏமாற்றத்துடன் அங்கிருந்து பிரித்தானியாவிற்கு திரும்பியுள்ளார்.
குடியேற்ற துறை நிர்வாகத்தின் பிழை காரணமாக தனக்கு இத்தகைய கொடூரமான சம்பவம் நடந்திருப்பதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.