பொங்கல், தமிழ் புத்தாண்டு, தீபாவளி ஆகியவற்றிற்குப் பிறகு சரியான வெளியீட்டுத் தேதி என கிறிஸ்துமஸ் விடுமுறையைத்தான் விரும்புவார்கள். அரையாண்டுத் தேர்வு முடிந்து கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக அப்போது விடுமுறை விடுவார்கள். இரண்டு வார காலமாவது அந்த விடுமுறை இருக்கும் என்பதால் படங்களை வெளியிட ஏதுவாக இருக்கும்.
இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் விடுமுறையில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘ஹீரோ’ படம் வெளியாகும் என ஏற்கெனவே அறிவித்து விட்டார்கள். அதோடு சூர்யா நடித்து வரும் ‘சூரரைப் போற்று’ படமும் அந்த சமயத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இப்போது அந்தப் போட்டியில் தனுஷ் நடிக்கும் ‘பட்டாஸ்’ படமும் இணையலாம் என்கிறார்கள். அப்படி என்றால் இந்த வருட கிறிஸ்துமஸுக்குப் போட்டி பலமாக இருக்கும். இந்த மும்முனைப் போட்டியால் மூன்று படங்களுமே தியேட்டர்களைப் பிரித்துக் கொள்ள வேண்டிய சூழல் உருவாகும். மூவருமே அப்போது வெளிவருவார்களா அல்லது கடைசி நேரத்தில் மாற்றிக் கொள்வார்களா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.