சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ் மற்றும் பலர் நடிக்க கடந்த ஆண்டு வெளிவந்த படம் ‘கனா’. தமிழில் நல்லதொரு வெற்றியைப் பெற்ற இந்தப் படம் தெலுங்கில் ‘கௌசல்யா கிருஷ்ணமூர்த்தி’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.
வரும் ஆகஸ்ட் 23ம் தேதி வெளியாக உள்ள இந்தப் படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்ச்சி இன்று(ஆக.,20) ஐதராபாத்தில் நடைபெற உள்ளது. அதில் விஜய் தேவரகொண்டா, ராஷி கண்ணா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பிக்கிறார்கள்.
ஐஸ்வர்யா ராஜேஷ் அடுத்து விஜய் தேவரகொண்டாவுடன் ஒரு தெலுங்குப் படத்தில் நடிக்க உள்ளார். அப்படத்தின் தயாரிப்பாளர்தான் ‘கௌசல்யா கிருஷ்ணமூர்த்தி’ படத்தின் தயாரிப்பாளரும் கூட.
தமிழில் ஏற்று நடித்த கோச் கதாபாத்திரத்தில் தெலுங்கிலும் நடிக்கிறார் சிவகார்த்திகேயன். தமிழைப் போலவே தெலுங்கிலும் இப்படம் ரசிகர்களைக் கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.