கனடாவில் ஜனவரி தொடக்கம் வாகன தரிப்பிட கட்டணங்களை அதிகரிக்கவுள்ளது TTC நிறுவனம்
எதிர்வரும் 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து ரொறொன்ரோ போக்குவரத்துக் கழகத்திற்கு (TTC) சொந்தமான வாகன தரிப்பிடங்களின் கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கழகத்திற்கு சொந்தமான சில வாகனத் தரிப்பிடங்கள் மூடப்பட்டுள்ள நிலையில், மீதமாக உள்ள பெரும்பாலான வாகனத் தரிப்பிடங்களின் கட்டணங்களை புது வருடத்துடன் அதிகரிக்கவுள்ளதாக TTC தெரிவித்துள்ளது.
அதன்படி TTC வாகன தரிப்பிடங்களில் வாகனங்களை தரித்துவைப்போர், தற்போதய கட்டணங்களை விட கூ1 இலிருந்து கூ2 வரையில் அதிகமாக செலுத்த வேண்டியிருக்கும் என்றும் கூறப்படுகிறது.
இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெறவுள்ள TTCயின் பொதுச் சபை கூட்டத்தில் இந்த கட்டண அதிகரிப்பு அங்கீகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், இதன் மூலம் போக்குவரத்து கட்டணங்களை தவிர மேலதிகமாக TTCக்கு 2017ஆம் ஆண்டில் 1.5 மில்லியன் டொலர்கள் வருமான அதிகரிப்பு ஏற்படும் என்று மதிப்பிடப்படுகிறது.
இது தொடர்பில் மேலும் குறிப்பிட்டுள்ள TTC நிறுவனம், வாகன நிறுத்துமிடத்திற்கான தேவைகள் அதிகரித்து வந்த போதிலும், நீண்டகாலமாகவே தாம் அவற்றுக்கான கட்டணங்களை அதிகரிக்கவில்லை எனவும், சில வாகன நிறுத்துமிடங்களுக்கு இறுதியாக 2013ஆம் ஆண்டிலும், மேலும் பல வாகன நிறுத்துமிடங்களுக்கு இறுதியாக 2001ஆம் ஆண்டிலுமே கட்டண அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.
மெட்ரோபாஸ் உள்ளவர்களுக்கான இலவச வாகன நிறுத்துமிட சேவையை ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் TTC நிறுவனம் நிறுத்தியதுடன், அனைவருக்குமான வாகன நிறுத்த கட்டணத்தினை 4 இலிருந்து 5 டொலர்களாக அதிகரித்தது.
இதனையடுத்து TTC வாகன தரிப்பிடங்களுக்கான பயன்பாடு வெகுவாக குறைவடைந்த போதும், பின்னர் அது படிப்படியாக அதிகரித்து, தற்போது அனைத்து வாகன நிறுத்துமிடங்களிலும் சராசரியாக 91 சதவீதம் பயன்பாட்டில் உள்ளதாக கூறப்படுகிறது.