கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் ஒரே நாளில் 11 பேர் உயிரழப்பு
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் அளவுக்கு அதிகமான போதை பொருள் பயன்பாடு காரணமாக, ஒரே நாளில் குறைந்தது 11 பேர் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகின்றது.
போதைப் பயன்பாட்டினால் கடந்த வியாழக்கிழமை மாத்திரம் 11 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது. குறிப்பாக வன்கூவர் டவுன்ரவுன் பகுதியில் மாத்திரம் குறைந்தது 6 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் அங்கு அவசர நடவடிக்கைளை மேற்கொள்ளுமாறு பிரிட்டிஷ் கொலம்பிய மரண விசாரணை அதிகாரிகள், மாநிலத்தின் காவல்த்துறையினர், அவசர மீட்புப் படையினர், நகர பிதாக்கள், சுகாதார அதிகாரிகள் என பல்வேறு தரப்பினரும் மாநில அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், அளவுக்கதிகமான சட்டவிரோத போதை மருந்துப் பாவனையினை கட்டுப்படுத்தவும், அதனை பயன்படுத்தியோருக்கான மருத்துவ உதவிகளை வழங்கவும் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அவர்கள் அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளனர்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள வன்கூவர் நகரபிதா, வன்கூவர் நகரில் மாத்திரம் 1,300 பேர் வரையில் இவ்வாறு சட்டவிரோத போதை மருந்துகளை அன்றாடம் பயன்படுத்தி வருவதாகவும், அவர்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கை தொடர்பில் தாம் பெரும் இக்கட்டை எதிர்கொண்டுள்ளார்.
அத்துடன் தற்போதைய நிலையில் போதை மருந்துகளுக்கு அடிமையாகி உள்ளவர்களுக்கான மருத்துவ சிகிச்சைகள் போதுமானதாக இல்லை எனவும், இந்த நெருக்கடியினை சமாளிப்பதற்கான மாற்று வழியினை நகரின் அவசரகாலப் பணியாளர்களினால் கண்டுகொள்ள முடியவில்லை என்றும் மேலும் அவர் தெரிவித்துள்ளார்.