ஏமனில் உள்ள இராணுவ தளங்களை குறிவைத்து ஹவூதி கிளர்ச்சியாளர்கள் மேற்கொண்ட தாக்குதலில் 25 இராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏமனின் சடா மாகாணத்துக்கு உள்பட்ட கடாப் பகுதியில் உள்ள இராணுவத்தினரின் ராணுவ தளங்களை இலக்கு வைத்து ஹவூதி கிளர்ச்சியாளர்கள் திடீர் தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலின் பின்னர் சில படைவீரர்களை ஹவூதி கிளர்ச்சியாளர்கள் பிணைக் கைதிகளாக சிறைபிடித்து சென்றுள்ளதாகவும் ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஏமன் நாட்டில் அரசாங்கத்திற்கு எதிராக ஈரானின் ஆதரவுடன் உள்நாட்டு ஹவூதி கிளர்ச்சியாளர்கள் கடந்த சில ஆண்டுகளாக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அரசப் படைகளுக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் மேற்கொண்டுவரும் மோதலில் இதுவரை 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது
அரசப் படையினருக்கு சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படைகள் ஆதரவளித்து வருகின்றன. உள்நாட்டு ஹவூதி கிளர்ச்சியாளர்கள் இடைக்கிடை கார் குண்டு வெடிப்பு, ஏவுகணைத் தாக்குதல் போன்ற பயங்கரவாத செயற்பாடுகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் இரு தரப்பினருக்கும் இடையே தொடர்ந்து மோதல் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன.