எவ்வித ஒழுக்காற்று நடவடிக்கைக்கும் அஞ்சப்போவதில்லை என அமைச்சர் ஹரின் பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.
மாத்தறை – சனத் ஜயசூரிய மைதானத்தில் நேற்று இடம்பெற்ற மக்கள் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘பிரதமரும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க 2020 ஆம் ஆண்டு கட்சி தலைமைத்துவத்தை இளைஞர்கள் கையில் ஒப்படைப்பதாக உறுதியளித்தார்.
அதற்கமையவே இன்று களத்தில் இறங்கியுள்ளோம். 2020 இல் அமைச்சர் சஜித் பிரேமதாசவை நிச்சயமாக ஜனாதிபதியாக்குவோம் என்று உறுதியளிக்கின்றோம்.
சிலர் தற்போது எமக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறுகிறார்கள். எவ்வித ஒழுக்காற்று நடவடிக்கைக்கும் நாம் அச்சமடையப் போவதில்லை.
நாம் பொது மக்களுடன் இருக்கின்றோம். கட்சி தலைமைத்துவம் உள்ளிட்ட அனைத்து பதவிகளும் ஆதரவாளர்களுக்கு அடுத்தேயாகும்.
தற்போதும் சில பிரதேசங்களில் எம்மால் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்களில் சில பற்றாக்குறை காணப்படுகின்றது. அவ்வாறு எந்த குறையும் இல்லாது சஜித் பிரேமதாசவுடன் மாத்திரமே எம்மால் தொடர்ந்து பயணிக்க முடியும்.
எனவே சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக நியமித்து அவரை நிச்சயமாக நாட்டின் தலைவராக்குவோம் என்று உறுதியளிக்கின்றேன்’ என குறிப்பிட்டுள்ளார்.