சூர்யாவின் எந்தப் படமும் தாமதம் ஆனதில்லை. பிதாமகன்கூட அதன் மேக்கிங்கிற்காக தாமதம் ஆனது. ஆனால் ஆர்ம்பிக்கப்பட்ட 2 ஆண்டுகளுக்கு மேலாகியும் என்ஜிகே படம் இன்னும் வெளிவரவில்லை. செல்வராகவன் இயக்கி உள்ள இந்தப் படத்தில் சாய்பல்லவி, ரகுல் ப்ரீத்தி சிங், பொன்வண்ணன், பாலா சிங், தலைவாசல் விஜய், உமா பத்மநாபன் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். படம் தாமதம் ஏன் என்பது குறித்து தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு கூறியதாவது:
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பது என்று முடிவான பிறகு ஒரு பவுண்டிங் ஸ்கிரிப்டை செல்வராகவன் கொண்டு வந்து கொடுத்தார். அந்த கதை அருமையாக இருந்த போதிலும் அந்த கதையின் சாயலில் அப்போது ஒரு படம் வெளியாகி இருந்தது. அதனால் அந்த கதையை கைவிட்டு அடுத்த கதைக்காக காத்திருந்தோம். அந்த கதைதான் என்ஜிகே.
படப்பிடிப்பு தொடங்கிய சில நாட்களிலேயே சினிமா ஸ்டிரைக் நடந்தது, அதன்பிறகு செல்வராகவனுக்கு சில நாள் உடம்பு முடியாமல் போனது, சூர்யாவுக்கு சில காலம் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இந்தப் படத்தில் நடித்த அனைவரும் பிசியான நடிகர்கள், அவர்களை ஒருங்கிணைக்க கொஞ்சம் காலஅவகாசம் தேவைப்பட்டது. அதனால்தான் படம் தாமதம் ஆனது.
இப்படம் ஆரம்பித்த நாளிலிருந்தே அனைவருக்கும் இருந்த எதிர்பார்ப்பு இன்றுவரை குறையாமல் இருக்கிறது. அனைவரும் கேட்ட கேள்வி வெளியாக எவ்வளவு காலம் ஆகும் என்று தான். தாமதமானாலும் சரியான நேரத்திற்குதான் வெளியாகவிருக்கிறது. இப்படத்தில் பணியாற்றிய அனைவரும் அழைத்த நேரத்தில் எந்த காரணமும் சொல்லாமல் பணியாற்றினார்கள். செல்வராகவன் எழுதிய கதை சிறிதும் மாறாமல் அப்படியே வந்திருக்கிறது. இப்படம் மே மாதம் 31ம் வெளியாகும். என்றார்.