ரஷ்யாவில் இக்கட்டான சூழலில் சாதூர்யமாக செயல்பட்டு 233 பேரின் உயிரைக் காப்பாற்றிய விமானியை ரஷ்யாவின் ஹீரோ என்றும் பலரும் பாராட்டி வரும் நிலையில் கடமையைத் தான் செய்ததாக அவர் தன்னடக்கத்தோடு கூறுகிறார்.
2009-ல் அமெரிக்காவில் பறவைகள் மோதியதால் எஞ்சின்கள் செயலிழந்த விமானத்தை விமானி செஸ்லி சல்லென்பெர்கெர் (Chesley Sullenberger) சாமர்த்தியமாக ஹட்சன் நதியில் இறக்கி 155 பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய சம்பவம் சல்லி (Sully) என்ற திரைப்படமாகவும் வந்து வெற்றிகண்டது.
நேற்று ரஷ்யாவின் சுகோவ்ஸ்கி விமான நிலையத்தில் இருந்து உரல் ஏர்லைன்ஸ்-ன் ஏர்பஸ் ஏ321 விமானம், 233 பேருடன் காலை 6.10 மணியளவில் புறப்பட்டது. விமானம் மேலெழும்பிய போது அந்த வழியாக வந்த பறவைக் கூட்டம் பக்கவாட்டு சுழல் விசிறிகளில் உள்ளிழுக்கப்பட்டு, எஞ்சின்கள் சேதமடைந்தன.
முதலில் ஒரு எஞ்சின் செயலிழந்ததும் அதில் இருந்து புகை வரத் தொடங்கியதால் கேப்டன் விமானி டமிர் யுசுபோவ் (Damir Yusupov) விமான நிலையத்துக்கு திருப்பி தரையிறக்க திட்டமிட்டார். ஆனால் சில நொடிகளில் மற்றொரு எஞ்சினும் படபடவென்ற சத்தத்தோடு செயலிழந்ததோடு, லேண்டிங் கியரும் கோளாறானது.
இதனால் விமானத்திற்கு என்ன நேருமோ என்று உள்ளே இருந்த பயணிகள் உள்ளிட்ட அனைவரும் பதற்றம் அடைந்தனர். ஆனால் கேப்டன் விமானி டமிர், சாதூர்யமாக செயல்பட்டு விமானத்தை அங்கே இருந்த மக்காச் சோளக் காட்டில் தரையிறக்கினார். விமானத்துக்குள் இருந்த பயணி ஒருவர் அந்த பரபரப்பான நிமிடங்களைப் படம்பிடித்தார்.
இச்சம்பவத்தில் 233 பேரும் உயிர் பிழைத்தனர். லேசான காயமடைந்த 5 குழந்தைகள் உள்பட 23 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. 233 பேரின் உயிரைக் காத்த ரஷ்யாவின் ஹீரோ என புகழப்படும் கேப்டன் விமானி செய்தியாளர்களைச் சந்தித்து நடந்ததை விவரித்தார். இத்தகைய சூழலில் என்ன செய்ய வேண்டும் என ஏற்கெனவே தான் பயிற்சி பெற்றதாகவும், கடமையை மட்டுமே செய்ததால் ஹீரோ என்றெல்லாம் புகழ வேண்டாம் என்றும் தன்னடக்கத்தோடு கேட்டுக் கொண்டார்.
அனைவரின் நலனையும் அறிந்த பின், ஓடி வந்து விமானத்தின் வெளிப்புற சேதத்தைப் பார்வையிட்டதாகவும், பின் காக்பிட்டிற்கு ஓடிச் சென்று தனது மனைவியை போனில் அழைத்து, அனைவரும் நலமாகவும், உயிரோடு இருப்பதாகவும் கூறியதாகவும் தெரிவித்தார். நிகழ்ந்ததை வேறு யாரேனும் மூலம் அறிந்து பதற்றமடையும் முன் தானே விவரத்தை விளக்கியதாகவும், அப்போதும் கதறி அழுத மனைவியை ஆஸ்வாசப்படுத்தியதாக அவர் நெகிழ்ச்சியோடு குறிப்பிட்டார்.
4 குழந்தைகளின் தந்தையும், வழக்கறிஞரான டமிர் யுசுபோவ், விமானங்களை ஓட்ட வேண்டும் என்ற ஆர்வத்தில் தனது 32-வது வயதில் அதற்கான கல்லூரியில் சேர்ந்து பயிற்சி பெற்றார். 2013-ம் ஆண்டு உரல் விமான நிறுவனத்தில் பணியில் சேர்ந்த டமிர் கடந்த ஆண்டு தான் கேப்டனாக பதவி உயர்வு பெற்றார். கேப்டனான ஒரே ஆண்டில் 233 பேரின் உயிரைக் காப்பாற்றிய விமானி டமிரின் சமயோஜிதத்தை பலரும் பாராட்டி வருகின்றனர்.
விமான நிலையத்துக்கு அருகே குப்பைகள் கொட்டப்படும் இடத்தை நோக்கி படையெடுக்கும் பறவைக் கூட்டங்களால் இதுபோன்ற விபத்து நேரிட்டதாக நிபுணர்கள் விளக்கமளித்தனர். எனவே, அதை அப்புறப்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.