இரத்தக்களரியை தவிர்ப்பதற்கான காலம் கடந்துவருவதாக இலங்கையில் நல்லாட்சி அரசாங்க பிரதமர் ரணில் விக்ரமசிங்க எச்சரித்துள்ளார்.
தற்போது ஏற்பட்டுள்ள அரசியலமைப்பு நெருக்கடியை நாடாளுமன்றம் மூலம் தீர்க்க முடியும் என்ற நம்பிக்கை வெளியிடப்பட்டுவரும் நிலையில் பிரதமர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
நம்பிக்கை இழந்த மக்கள் அமைதி இன்மையில் ஈடுபடலாம் என ஏ.எப்.பி என்ற சர்வதேச ஊடகத்திற்கு வழங்கிய செவ்வியில் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
வன்முறைகளில் ஈடுபட வேண்டாம் என நாம் எமது மக்களுக்கு அழைப்பு விடுகின்றோம் எனவும் அவர் கூறியுள்ளார்.
எனினும் வன்முறைகளுடன் கூடிய சூழல் ஏற்படுமா என்பது தெரியாது எனக் குறிப்பிட்ட ரணில் விக்ரமசிங்க, நம்பிக்கை இழந்த சிலர் இரத்தக்களரியை ஆரம்பிக்கலாம் எனவும் அச்சம் வெளியிட்டுள்ளார்.
தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை அமைதியான முறையில் நிறைவுக்கு வரும் எனவும் நெருக்கடிக்கான தீர்வு விரைவில் காணப்படும் எனவும் நல்லாட்சி அரசாங்கத்தின் பிரதமர் ரணில் விக்ரமசிங்க நம்பிக்கை வெளியிட்டார்.
இறுதியாக நாடாளுமன்றம் பலமானது என்பது நிரூபிக்கப்படும் எனவும் இதனை நீண்டநாட்களுக்கு தாமதப்படுத்த முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.